காப்பிய நேர்மை - - 121 அறிமுகப்படுத்திக்கொண்டவன். அத்தகைய அடிமைத் தம்பி இஃது அரக்கனின் வஞ்சகமான் என்று இடித்து எடுத்துக் காட்டும்போது இராமன் சிறிதாவது சிந்தித்திருக்க வேண்டாமா? முன்னரே சூர்ப்பனகையின் வரவையும் வஞ்சகத்தையும் பகையையும் இராமன் அறிவான். அவள் சீதையைத் தூக்கிச்செல்ல முயன்றதையும் அவன் அறிவான். கரன் வதைக்குப்பின் இர்ாம இலக்குவர் தம் ஆரணிய வாழ்க்கையில் எவ்வளவு விழிப்பாக இருத்தல் வேண்டும்? சீதையை இருவரும் பிரியாது காக்க வேண்டாமா? காமுற்ற சூர்ப்பனகை உறுப்புகள் அறுபட்டபின், சும்மா இருப்பள் என வாளா இருக்கலாமா? வாள் கொண்டல்லவா சீதையைச் சுற்றிப் பிரியாது இருக்கவேண்டும்? இத்தகைய சூழ்நிலையில் இராமன் பிரிந்ததுதான் பெரும் பிழை, பின் நிகழ்ச்சிகளுக்கு அடிப்படைப் பிழை. தேவர் செய்த தவத்தால் இராமன் இப்பிழை செய்தான் என்றாலும், வினையின் பயனை இராமனாயினும் நுகர்ந்துதானே ஆகவேண்டும்? கடக்க ஒண்ணா வினையென வந்து நின்ற மான் என்பர் கம்பர். ஒருவர் செய்த பிழையை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கண்டிக்கலாம்; தானே உணர்ந்ததாகவோ, பிறர் உணர்த்தியதாகவோ காட்டலாம்; பல சொற்களால் அல்லது ஒரிரு சொற்களால் புலப்படுத்தலாம். யாவர் பிழை செய்யினும் எவ்வாறேனும் கண்டித்தல் என்பது வேண்டும். உலக வழக்கில் தன்னலம் கருதிச் செல்வாக்குடையவர்தம் பிழையை நாம் கண்டியாதிருக்கலாம். காப்பிய வழக்கில் எவர் பிழையும் கண்டிப்புக்கு உட்பட வேண்டும்: உட்படுத்துவதே காப்பிய நேர்மை. அதுவும் ஒருவன் மனைவியை ஒரு கயவன் தூக்கிச் செல்லுமாறு உரியவர்களே வாய்ப்பு அளித்தார்கள் என்றால் எவ்வளவு இடிப்புரைக்கு உரியவர்கள்? இராமன் தன்னேரில்லாத் தலைவன் ஆதலின், இராமனைப் பிரானாகக் கம்பர் மதிப்பவர் ஆதலின், அவன் குற்றத்தை மிக வெளிப்படையாகவும் பலபடவும் பலர் வாய்ப்படவும் பாடுவார் என எதிர்பார்ப்பது பிழை. பாத்திரத்துக்குத் தகப் பாடும் நாகரிகம் வேறுபடும். . - சீதையை இராவணன் கவர்ந்து சென்றபின், இராமனும், இலக்குவனும் சடாயுவைக் காண்கின்றனர். தனக்கும் இராவணனுக்கும் நடந்த போரையும் தானுற்ற துயரையும் சடாயு கூறுகின்றான். இராமனுக்குச் சினம் பொங்கிற்று. எல்லா உலகங்களும் எட்டுத்திசைகளும் ஞாயிறும் மீன்களும் நீரும் நிலமும் காற்றும் எல்லாம் அழியச் செய்வேன் என்று வீறுமொழிந்தான் இராமன். துஞ்சின உலகமெல்லாம் என்பது ஏன்? துணிந்த