பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசங்க பூஷணம்!

49



வாய்ப்புக் கிடைக்குமா என்ற தாகமாயிற்றே, ஐயர் வேண்டிக்கொண்டதும், ஆசிரியர் மனமுவந்து இசைந்தார். இசையுமுன் கூறினார், "நானென்ன அவ்வளவு அதிகம் அறிந்தவனா? கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு, கனியிருக்கக் காய் தேடுதல்போல், எவ்வளவோ அறிவாளிகள் இருக்க, என்னை அழைத்தீர், சிறுமதி உடையேன் ஆயினும், சிறுமதியுடையோன் அருளைத் துணைகொண்டு, என் கடன் பணிசெய்து கிடப்பதே எனும் ஆன்றோர் மொழிப்படி தொண்டு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று புலவர் கூறினார், கூறிவிட்டு மிக மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இருக்காது! ஆறு வாசகங்கள் அவர் பேசினார், அதிலே மூன்று மேற்கோள்கள்.

  1. கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.
  2. கனியிருக்கக் காய் தேடுதல்.
  3. என்கடன் பணிசெய்து கிடப்பதே.

ஆக மூன்று, ஆறு வாசகங்களிலே. பிரசங்க பூஷணமல்லவா? வெட்டிப்பேச்சா பேசுவார். மேலும் நெட்டுருப் போட்ட அடிகளைக் கொட்டிப் பேசாவிட்டால் ஏட்டைப் பிடித்ததனால் யாதுபயன்! எனவேதான் ஆறிலே மூன்று, ஆன்றோர் மொழியைப் பொழிந்தார். அம்மட்டோ ! சிறுமதியுடையேன் சிறுமதி உடையோன் அருளைத் துணை கொண்டு என்று கூறினார். "அருணாசல ஐயரே ! என்ன எண்ணுகிறீர் என் புலமைபற்றி! அந்த வாசகத்திலே பொதிந்துள்ள அழகு கண்டீரா! சிற்றறிவு படைத்தநான், என்ற பொருள்பட, சிறுமதி உடையேன் என்றுகூறினேன். பிறைச் சந்திரனை அணிந்த யெம்மானின் துணைகொள்வேன் என்ற கருத்துக்குச் சிறுமதியுடையோன் என்று சிவனாரைச் சொன்னேன்! ஒரே பதம், இருபொருள் ! அது ஓர் அழகு | சிறுமதி உடையோன் என்பது நித்தாஸ்துதி என்ற இலக்கணச் செறிவு கொண்டது. இத்தனையும் ஒரே