பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கற்பனைச்சித்திரம்



வாசகத்தில் அமைத்தேன். எப்படி என் சமர்த்து "என்று புலவர் கூறுவதுபோலிருந்தது அவருடைய கெம்பீரமான கனைப்பும், பார்வையும். அருணாசல ஐயர், அதிகம் பேசவில்லை. தலைவரைத் தயார் செய்வதற்காக அவர் சென்று விட்டார். புலவர் தனது சீடனொருவனை அழைத்தார். "ஏடுதனில் எனது மொழியைப் பொறித்திடு, மாலைச் சொற்பொழிவுக்கு" என்றார். சீடன், பிரசங்க பூஷணமாக வேண்டியவன்! எனவே, ஏடும் கையுமாகப் புலவர் எதிரே அமர்ந்தான். ஈசனைத் தியானித்துவிட்டுப் புலவர் துவக்கினார், சொற்பொழிவை.

"அன்பரே!" என்றார், ஏடுஎழுதி, அன்பரே ! என்று எதிரொலித்தார் எழுதி முடித்து. புலவர், தலையை அசைத்தார், கனைத்தார், "வேண்டாம், அன்பரே! என்று அழைப்பதைவிட, மெய்யன்பரே! என்று இருக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்று ஓர் திருத்தம் உரைத்தார். அன்பரே அடிபட்டது, மெய்யன்பரே! பொறிக்கப்பட்டது ஏட்டில்.

"அப்பா! மெய்யன்பரே என்று கூறுவதைவிட, சைவ மெய்யன்பரே! என்று கூறிடல் சாலச்சிறந்ததென்று எண்ணுகிறேன்" என்றார் புலவர். அவருடைய எண்ணத்தைத்தானே அவன் ஏட்டிலே எழுதவேண்டியவன். எனவே, மெய்யன்பரே! என்ற பதத்தையும் அடித்துவிட்டு, சைவமெய்யன்பரே! என்று எழுதினான்.

"என்ன எழுதினாய் தம்பி!" என்று கேட்டார் புலவர்.

"சைவமெய்யன்பரே என்று எழுதினேன்" என்றான் சீடன். புலவர் ஓர் புன்னகை புரிந்தார்."அது நியாயமல்ல!" என்று கூறினார். "எது?" என்று கேட்டான் ஏடுதாங்கி. "ஆலமரத்தடியார், சிவனார், அடியேனும் சைவனே! என்றாலும், இன்று அங்கு கூடப்போகும் அன்பர்களிலே, சைவர் மட்டுமா இருப்பர். எங்கேனும் உண்டா? வைணவரும் இருப்பர். எனவே, சைவமெய்யன்-