மதுரை வாலைசாமி ஞானக் கும்மி

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

மதுரை வாலைசாமி ஞானக் கும்மி

சித்தர் பாடல்கள் பக்கம் 257 முதல்

காப்பு[தொகு]

1-4[தொகு]

1

சீர் மேவு ஞான வடிவான – பர

தேசிகன் சற்குரு தன் அருளால்

பார் மீதில் ஞானக் கும்மி பாட – சிவ

பாலன் கணபதி காப்பாமே

2

அம்பிகை வாலை பதம் போற்றி – அருள்

ஆனந்தக் கும்மித் தமிழ் பாடத்

தும்பி முகனுக்கு இளையவனாம் – சிவ

சுப்பிர மணியனும் காப்பாமே

3

நாலாம் வேதமும் ஓராறும் – வெகு

நா நா பேதமாய் நின்றானை

மேலாய்ப் போற்றிக் கும்மி பாடச் – செந்தில்

வேலவன் தன் பதம் காப்பாமே

4

பாரில் உயர் மதுரா புரியில் – வாலை

சாமி சொல்லும் கும்மிப் பாடலுக்கு

மேரு அதன் அடி மூல முக்கோண

விநாயகன் தன் பதம் காப்பாமே

நூல்[தொகு]

5-10[தொகு]

ஆதியும் அந்தமும் ஒன்றாகி – வளர்

அண்ட பிண்டமும் இரண்டாகிச்

சாதி பலபல வேறாகி நின்று

தத்துவம் கேளடி ஞானப் பெண்ணே

6

தேகம் ஆனதோர் மல பாண்டம் – அதில்

சிற்பணம் வந்திடும் முற்பணத்தை

யோகம் எனும் தமிழ்ப் பாடலுக்கு மனம்

உவந்து கேளடி ஞானப் பெண்ணே

7

ஏகப் பெருவெளி பட்டணமாம் – அதில்

எவனோ சித்தன் ஒருவன் உண்டாம் – அந்த

வாசல் நிலை பேசா வாயும் இல்லை – அந்த

மாப்பிள்ளை பெண் என்று ஞானப் பெண்ணே

8

சாட்சி எனும் பிரமன் பிள்ளைக்கு மூலச்

சக்தி என்ற ஒரு பெண்ணாச்சு

சூட்சுமக் காரணம் இரண்டினுக்கு - நிலை

தூல நாம் என்கின்றாள் ஞானப் பெண்ணே

9

ஊமையன் என்றே அறிந்து கொண்டாள் – அந்த

ஊமை பேச்சு எல்லாமே நாம் என்கிறாள்

சீமையை ஆளத் ‘துசம்’ கட்டினாள் - அந்தச்

சீமாட்டி தானடி ஞானப் பெண்ணே

10

பெண்ணரசு ஆனது இரத்தினமாம் – அதைப்

பெண் என்று சொல்லவும் கேள்வி உண்டோ

மண்ணையும் விண்ணையும் கூட்டிப் பயிர் - செய்த

மார்க்கத்தைக் கேளடி ஞானப் பெண்ணே

11-15[தொகு]

11

பட்டணம் கட்டி மகராசி – துரை

பாங்குடன் செய்த அதிகாரச்

சட்டமும் சொல்லத் தொலையாதே – இதைச்

சற்றே கேளடி ஞானப் பெண்ணே

12

அஞ்சூர் அஞ்சூர் வகுப்பபாச் சாமம் – அதில்

அஞ்சூர் அஞ்சு பிரிவு ஆச்சாம்

அஞ்சூருக்கு ஒரு வித்து ஆச்சாமம் – அதற்

கான குளம் உண்டு ஞானப் பெண்ணே

13

ஊரை அடுத்து மலையும் உண்டாம் – அதற்கு

உள்ளாய் இருந்த நிலைக்காரர்

பேரை உரைக்க இனிக் கேளும் – அவர்

பெருமை தான் என்னடி ஞானப் பெண்ணே

14

தலை மன்னாரில் இருப்பவராம் – அந்தச்

சட்டையப் பிள்ளையும் நெட்டையராம்

நிலமும் மான்யமும் என்னவன் தாள் – அந்த

நிசம் தெரியுமோ ஞானப் பெண்ணே

15

கும்பகோணத்திலே அப்புப் பிள்ளை - அவர்

கூட்டம் அற்றால் வெகு வாட்டம் என்று

செம்பாதிப் பங்குதான் கேட்டு வந்தால் – நியாயம்

தெளிவது எப்படி ஞானப் பெண்ணே

16-20[தொகு]

16

மூலக்குடி வன்னித் தேவரை - வரவர்

மூர்க்கமும் தீர்க்கவும் மார்க்கம் உண்டோ

நாலு கரைப்பங்கு நாம் என்கிறார் – இந்த

ஞானம் தெரியுமோ ஞானப் பெண்ணே

17

காத்தவராய கவுண்டனுக்குத் – திசைக்

காவலும் மற்ற விசாரணையும்

பார்த்து வருவது நாம் என்கிறார் – இந்தப்

படி நிலைக்குமோ ஞானப் பெண்ணே

18

ஆகாயம் ஆன பரஞ்சோதி – அவர்

அஞ்சுக் கரைப் பங்கும் தனக்குள்ளே

சேகரமாம் என்றுஞ் சொல்லுகிறார் – இந்தச்

சேதியைக் கேளடி ஞானப் பெண்ணே

19

அம்பலக் காரரும் மூன்று பேராம் – பின்னும்

அத்தக நாட்டுக் கணக்கன் என்றாம்

வம்பு செய்தால் அந்த முன்னாள் - அனுப்படி

வகை தெரியுமோ ஞானப் பெண்ணே

20

ஒன்பது கூத்தரும் பங்காளி – எந்த

ஊருக்குள் உள்ளாரும் அப்படியாம்

ஐம்பது சேருவைக் காரருக்கும் – அவன்

அண்ணன் ஒருவனாம் ஞானப் பெண்ணே

21-25[தொகு]

21

கோயில் குருக்கள் ஒரு பார்ப்பான் – தெப்பக்

குளத்தின் மேலே அவன் வீடு

தாவிக் கொண்டு தொடை தட்டுகிறான் – நிலம்

சாருமோ கேளடி ஞானப் பெண்ணே

22

செட்டி ஒருவனாம் பங்காளி – அதில்

சேர்ந்தவனாக மிக ஓங்கிக்

கட்டி வராகனைக் கொண்டு வந்தால் – காணி

ஆட்சி செல்லுமோ ஞானப் பெண்ணே

23

காரியக் காரரோ அஞ்சு பேராம் – அவர்

காரியம் பார்க்க வீரஞ்சு பேராம்

மாரீசக் காரர் சமாதிக்கண் – மூன்றுபேர்

வார்த்தையைக் கேளடி ஞானப் பெண்ணே

24

ஊழியக் காரர் அநேகர் உண்டாம் – அவர்க்

கும்பளம் சம்பளம் நிரம்ப உண்டாம்

பாளையங் கோட்டைக்குச் சாரிவைத்தால் – இவர்

பதுங்கு வாரடி ஞானப் பெண்ணே

25

பாழுருக்கு ஒரு மேல் மணியாம் – அவன்

பார்த்தால் சின்னப் பயல் காணும்

வேளூரான் அரைப் பங்குத் - தனமுதல்

விற்றுக் கொடுக்கிறான் ஞானப் ப்ண்ணே

26-30[தொகு]

26

ஆராறு குடியும் உண்டாகும் – அதில்

அந்நியக் குடி முப்பத்து ஐந்தும் உண்டாம்

ஓராறு பத்துக் குடிதனிலே – அஃது

ஒட்டுக் குடியடி ஞானப் பெண்ணே

27

இத்தனை பேரும் இருந்தாலும் – அதில்

இரண்டே பேர்கள் சமுசாரி

அத்தனை பேரையும் தள்ளி வைத்தால் – பயிர்

ஆரிடு வாரடி ஞானப் பெண்ணே

28

ஒற்றேர் ஒற்றை எருதாகும் – அதில்

ஒன்று பரம்பு முச்சால் அடிக்கும்

கற்றுடன் காரணம் கண்டாயோ – ஞானக்

கண் கொண்டு பாரடி ஞானப் பெண்ணே

29

இரண்டு கரைக்குடி மானியமாம் – அதில்

இட்ட விதை ஒட்டி சட்டி உண்டாம்

பண்டு பழகின மேன் புள்ளிக் காரனும்

பார்த்துப் போயினான் ஞானப் பெண்ணே

30

புள்ளிக் குறைச்சலும் வாராமல் - -முன்னே

போட்ட பலனும் கை யாடாமல்

கொள்ளையிடச் சொல்லி ஓலை வந்தால் – இது

கொடுமை சொல்லடி ஞானப் பெண்ணே

31-35[தொகு]

31

வந்த விதியென்று இருந்தாலும் – வசக்

கட்டு நிலுவையும் கேட்கிறானே

இந்த மகிமை அவன்தானோ – இதற்கு

என்ன சுகமடி ஞானப் பெண்ணே

32

தரிசுக் கிடக்கிற பெட்டியிலே – ஏறித்

தண்ணீர் பாய்ச்சவும் சொல்லுகிறான்

வரி கொடுக்கிறது இல்லை என்றால் – பூசை

மாட்டுகிறான் அடி ஞானப் பெண்ணே

33

ஊரில் குடியதில் இருக்க ஒட்டான் – இருந்து

ஊழியம் செய்யவும் வேலை யிட்டான்

தீரம் இல்லை யென்று சொன்னாலும் – அவன்

தெண்டம் பிடிக்கிறான் ஞானப் பெண்ணே

34

அந்த இருபத்து ஓராயிரத்து – இருநூற்றுக்

கல நெல்லுமே கண்டு முதல்
வந்தது உண்டோ அதில் மூன்றில் – ஒருபங்கு
வாரம் பிடித்தாண்டி ஞானப் பெண்ணே

35

மிச்சம் இருந்த நெல்லுத் தொகையில் – வாரம்

விண்ணுறு நோய் கொண்ட பேயனுடன்
அச்சுதன் சேயனும் துங்கக் கோனானும் – ஆய்
அழித்துப் போட்டாரடி ஞானப் பெண்ணே

36-40[தொகு]

36

நிலம் விளைந்ததும் காணீரோ – அதில்

செலவு அழித்ததும் பாரீரோ

அலமந்து திரியாமலே – அருள்

ஆனந்தம் சேரடி ஞானப் பெண்ணே

37

எண்சாண் நீளம் ஒரூவிடாம் – அதில்

எட்டொரு பீற்றல் மலக்கூடாம்

பஞ்சாயக்காரர் ஈரைந்து பேரும் – தெய்வப்

பதியிது என்கிறார் ஞானப் பெண்ணே

38

தேகம் என்னும் சிவாலயமாம் – அதிற்

சென்னி சிறுவாயில் கோபுரமாம்

காக மான இரண்டு கரக் – கோடுங்

கையாம் கேளடி ஞானப் பெண்ணே

39

உண்ணாக்கு என்ற கொடி மரமாம் – அதிற்

கோபுர சந்திர புட்கரணி

அண்ணாக்கு என்றே வலப்புறத்திற் – கண்ட

அக்கினி தீர்த்தமாம் ஞானப் பெண்ணே

40

நாற்பத்து முக்கோண மண்டபமாம் – அதன்

நடுவிருக்கு தாம் சிங்காரம்

பார்ப்பது சக்கரக் கோட்டையிலே – இந்தப்

படியிருக்கு தாம் ஞானப் பெண்ணே

41-45[தொகு]

41

பீடம் இருப்பது மையத்திலே – பலி

பீடம் இருப்பதுங் குய்யத்திலே

மாடம் இருந்த சிவாலயத்தின் – மணி

விளக்கு இருக்குது ஞானப் பெண்ணே

42

இப்படியான திருக்கோவில் – அதற்கு

எப்படி வாயில் இருக்காதோ

அப்படி என்று தெரியாமல் – எறிந்

தலைகிறார் அடி ஞானப் பெண்ணே

43

பூட்டைத் திறப்பதும் கையாலே – மனப்

பூட்டைத் திறப்பதும் மெய்யாலே

வீட்டைத் திறக்க முடியாமல் – விட்ட

வீதி இதென்கிறார் ஞானப் பெண்ணே

44

வாசலிலே ஒரு மேல்வாசல் – அந்த

வாசலிலே சிறு வாசலுண்டு

நேசமுடன் திரு வாசலில் – பூட்டு

நெருக்கம் பாரடி ஞானப் பெண்ணே

45

அட்சரமாம் மௌன அட்சரம் – ஆவது

ஆனால் நல்ல திறவு கோலாம்

உச்சிதமாகத் திறந்தாலே – அந்த

உச்சிவழி காணும் ஞானப் பெண்ணே

46-50[தொகு]

46

கண்ணாலே மனக் கண்ணாலே – அதைக்

கண்டாலே வழி உண்டாகும்

பெண்ணாசை தன்னை அடுக்காமல் – வழி

பேணிப் பாரடி ஞானப் பெண்ணே

47

பார்த்து நடப்பது மேல்வாசல் – அந்தப்

பாதை அறிவதும் எவ்வாறு

மாத்திரை நேரம் பிரியாமல் – பாதை

மார்க்கம் கேளடி ஞானப் பெண்ணே

48

எருக் கிடந்த குழிதாண்டி – அதில்

இரண்டு விரற்கடை மேல் தாண்டிக்

கருக் கிடைக்கும் அடையாளம் – அதைக்

கண்டு கேளடி ஞானப் பெண்ணை

49

மாயன் அரண்மனை காணீரோ – வன்னி

மரம் இருப்பதும் தோணீரோ

நேய மது கடந்தப்பாலே – அறு

கோணப் படியடி ஞானப் பெண்ணே

50

கோணத்தில் நின்று மயங்காதே – சுழிக்

காற்றை அடக்கிச் சிணுங்காதே

வீணுக்கு அலைந்து இயங்காதே – தூல

வேடத்தைத் தள்ளடி ஞானப் பெண்ணே

51-55[தொகு]

51

தூலத்தை விட்டு விடாயாகில் – அதில்

சூட்சத்தைக் காண முடியாது

பாலத்தில் ஏறி நடந்தக்கால் - பெரும்

பாதையிது அல்லவோ ஞானப் பெண்ணே

52

பாதையான பெரும் பாதையைக் – கிட்டிடப்

பட்டணம் உண்டு ஒரு வட்டமதாய்

நாதமும் கீதமும் கேட்குதடி – தெய்வ

நாயகன் சந்நிதி ஞானப் பெண்ணே

53

சந்நிதி என்னடி கண்டதுண்டோ – கண்டால்

தத்துவம் பேசத் திறமும் உண்டோ

முன்னே முப்பாழும் கடப்பது உண்டோ – அதில்

முச்சுடர் உண்டடி ஞானப் பெண்ணே

54

முச்சுடர் வட்டமே சக்கரமாம் – அது

மூக்கு நுனியில் சுழுமுனையாம்

அச்சுடர் வட்டத்து இருந்தவனே – குரு

ஆனந்த நந்தியாம் ஞானப் பெண்ணே

55

நந்தி இருந்தது வன்னி வட்டம் – அதில்

நாட்டம் புருவமத் தியான – திட்டம்
சந்திரனும் கதிர்ச் சூரியனும் – அந்நத்
தலத்தில் நின்றனர் ஞானப் பெண்ணே

56-60[தொகு]

56

நாத விநது அல்லவோ நால் யோனி – தச

நாத விந்தல்லவோ எழு தோற்றம்
நாத விந்தால் உடலும் உயிரும் – பரம்
நந்தியைப் போற்றடி ஞானப் பெண்ணே

57

விந்து இருந்த தலந்தனிலே - குரு

நந்தி இருந்தார் கொலுவாகி

சிந்தை தெளிந்து மகாரம் வைத்தால் – அந்தச்

சீமானைக் காணலாம் ஞானப் பெண்ணே

58

சீமான் கிட்ட அடுத்தக் கால் – மேலைச்

சீமை நமக்குக் குடியாச்சு

ஆமாம் என்று கும்மிப் பாடி – அருள்

ஆனந்தம் சேரடி ஞானப் பெண்ணே


ஆனந்தம் ஆன தலந்தானே – அது

அத்து விதமாம் தலந்தானே

தானந்தமான சதாசிவத்தைப் – போற்றித்

தாண்டிக் கும்மி அடியுங்கடி

60

ஞானமாம் ஆயிரத்தெட்டு இதழ்ப் - பீடம்

நாட்டமாம் சந்திரனார் வீடு

மோனம் இருந்த மகார – மவுனத்தை

மூட்டிக் கும்மி அடியுங்கடி

61-65[தொகு]

61

குண்டலி வாசி அகாரமடி - பிடர்க்

கண்டம் அதிலே உகாரமடி

உண்டு சுழியின் மகாரம் – வைத்தால்

சிவலோகம் இதல்லவோ ஞானப் பெண்ணே

62

ஓங்காரமான பிராணவத் தாள் – உங்கும்

உயர்ந்த சோம கலை நிறத்தாள்

ரீங்காரமான பராசக்தியை –நீங்கள்

நேர்ந்து கும்மி அடியுங்கடி

63

பூரகம் முப்பத்து இரண்டாகும் – மனப்

பூரண கும்பம் இரட்டியதாம்

கூறவே ரேசகம் எண்ணிரண்டாம் – அந்தக்

குறிப்பு அறிந்து கொள் ஞானப் பெண்ணே

64

பிங்கலை யாவது ரேசகத்தை – வளர்

பூரகந் தன்னிட அத்தூதி

நங்களை நந்தியிற் கும்பிக்கவே – சிவ

நாட்டம் இது அல்லவோ ஞானப் பெண்ணே

65

அறிந்து கொள்ளுமெ – மூத்தோடே

பவுரணை முதல் அமாவாசி மட்டும்

மறந்திடாமற் செய் மாத்திரையின் – படி

வாசி வசமாகும் ஞானப் பெண்ணே

66-70[தொகு]

66

காலாலே கனல் ஏற்றுங்கடி – சழி

மேலே கொண்டு அமுது ஊட்டுங்கடி

மூலாதாரத்து அலங்கேசரம் – என்று

முழங்கிக் கும்மி அடியுங்கடி

67

சார்ந்து கொள்ளடி கேசரத்தை – முதல்

அன்னை அறியலாம் தானாகக்

கூர்ந்து மூலக் கணபதி – பாதத்தை

கும்பிட்டுக் கொள்ளடி ஞானப் பெண்ணே

68

நவ்வெழுத்தே பிரமனார் ஆகும் – அதில்

நாரணன் மவ்வெழுத்து ஆனானே

சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் – இன்னும்

செப்புவன் கேளடி ஞானப் பெண்ணே

69

செப்பவே வவ்வு மகேசுரனாம் – வட்டஞ்

சேர்ந்துப சாரம் சதாசிவனாம்

தம்பிலா ஐந்து எழுத்தாலே – சராசரத்

தங்கி இருந்தது ஞானப் பெண்ணே

70

வாலையின் அட்சரம் மூன்றாகும் – அதை

வாய் கொண்டு சொல்பவரார் காணும்

மேலொன்றும் கீலொன்றும் மத்திமமும் – கூட்டி

விரைந்து பாரடி ஞானப் பெண்ணே

71-75[தொகு]

71

விரைந்து சொல்லுவன் மூன்றெழுத்தால் – சதம்

விரிந்து தானுயர் உண்டாச்சு

தெரிந்து கண்டவர் தங்களுக்கு – காவலை

தீட்சை இதல்லவோ ஞானப் பெண்ணே

72

தீட்சை எனும் சிவ சக்கரத் - தின்மையைத்

தேவி எழுத்தை நிரை நிறுத்திக்

காட்சியுடன் சிவபூசை செய்தால் – சித்தி

கைவசம் ஆமடி ஞானப் பெண்ணே

73

கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதே – பின்பு

கஞ்சா உறக்கமும் கொள்ளாதே

உள்ளுண்டு சோமக் கலையாதி – பானத்தை ஊட்டிக் கும்மி அடியுங்கடி

74

கும்மி அடிப்பெண்கள் அம்பலதது - ஐயரைக்

கூட்டி அமுதம் குடியுங்கடி

அம்மென்றும் உம்மென்றும் சொல்லாமல் – நின்ற

அத்விதம் பாரடி ஞானப் பெண்ணே

75

அத்விதம் ஆவத்துக்கு ஆதியடி – மத

ஆயிரத்து எட்டிதழ்ப் பூசை பண்ண

முத்தி தரும் சோமப்பாலை – அனுதினம்

மூட்டிக் கும்மி அடியுங்கடி

76-80[தொகு]

76

மூட்டுவது என்ன திரிகோண – வட்ட

மூலத்தில் குண்டலி வாசியினால்

நாட்டுவன் பூரண நாலையும் – கட்டினான்

ஞாயமிது அல்லவோ ஞானப் பெண்ணே

77

கட்டிக்கொள் விந்துவைத் தள்ளாதே – சுழிக்

காற்றை அடக்கிப் பெருக்காதே

சுட்டி மனம் பொறாது உறாதே – காமச்

சோம்பலைத் தள்ளடி ஞானப் பெண்ணே

78

சோம்பலும் தூக்கமும் ஆகாதே – அன்ன

சுகியும் சோகமும் கொள்ளாதே

சாம்ப சதாசிவ நாட்டத்திலே – நின்று

சார்ந்து கும்மி அடியுங்கடி

79

கைவசம் ஆவது சட்டிவித்தை - ஞானக்

கற்பகமும் வந்து லபிக்குமடி

தெய்வம் இவரென்று சொன்னாரே – நல்ல

சித்தரும் முத்தரும் ஞானப் பெண்ணே

80

யோகத்துக்கு ஆதி உமைதீட்சை – மற்ற

யோகத்துக்கு எல்லாம் முதல் தீட்சை

போகத்தைக் கைவிடல் ஆகாதே – சுத்திப்

பூசையை வேண்டிக்கொள் ஞானப் பெண்ணே

81-85[தொகு]

81

வேண்டிக் கொள் விந்து முகனா –தஞ்சக்தி

மேவும் சிவத்துடனே பரமாம்

தாண்டிக் கொள் இந்த வகையாறும் – யோக

சாதக சாக்கிரம் ஞானப் பெண்ணே

82

சாக்கிரம் விந்துக்கு மேலண்டமாம் – அதைச்

சார்ந்திடும் நிற்குண நிட்களந்தான்

பார்க்கில் நிராதார மாமலத்தை அதைப்

பாராவிடம் அந்தம் ஞானப் பெண்ணே

83

அந்த மடியிந்த மேலாறும் கண்டே

ஆரறி வாரடி ஞானவழி

சிந்தை தெரிந்த பெரியோரைக் – கண்டு

சேவித்துக் கும்மி அடியுங்கடி

84

சேவிப்பதும் தவ நந்தியடி யோகமாய்

நிற்பதும் விந்து நாதமடி

ஆவிக்கு இசைந்த சதாசிவ - சாக்கிரம்

அவ்விடம் ஆமடி ஞானப் பெண்ணே

85

அவ்விட்டே யுவ்விட்டே மேற்சுழியிற் – சுழி

அங்கியை விட்டுக் காலாலே

மவ்விட்டு நாதவித்து உட்பொருளைக் – கண்டு

வாழ்த்திக் கும்மி அடியுங்கடி

86-90[தொகு]

86

முழக்கம் என்ன பிரணவமாம் – அதை

மூட்டுச் சமாதியில் ரேசகத்தை

விளக்கும் ஆகும் இரவி காந்தி – நித்தம்

வேண்டிக் கும்மி அடியுங்கடி

87

பார்க்கும் சுழுமுனை காணாரே – அது

மூக்கு நுனியென்று அறியாரே

மார்க்கம் அறிந்து பெரியோரைக் – கண்டு

வாழ்த்திக் கும்மி அடியுங்கடி

88

வாழ்த்தியடி பெண்ணே ரேசகத்தை – வினை

மாற்றியடி பெண்ணே பூரகத்தை

தூற்று மகாமிய சஞ்சிதத்தைத் – தொல்லை

தொலைத்துக் கும்மி அடியுங்கடி

89

பாசமற்ற இடம் கேசரமாம் – ஒரு

பாதியில் நின்றிட யோகமுமாம்

நேசமற்றார் பிர்ம ஞான - சமாதியும்

நிருவி கற்பமாம் ஞானப் பெண்ணே

90

கற்பமடி இது மெய்யாகும் – மற்றைக்

கர்மம் எல்லாம் மிக அற்பமடி

தற்பர் ஆனந்த சதாசிவ – மோனத்தை

சார்ந்து கும்மி அடியுங்கடி

91-95[தொகு]

91

பாசத்தைச் சொல்லும் உடலாக – அந்தப்

பசுவைச் சொல்லும் உயிராக

நேசத்தில் நிற்பது யாதது – பிரம

நிட்டை என்பாரடி ஞானப் பெண்ணே

92

தேகத்துக்கு ஆதியாம் ஐம்பூதம் – மற்றைச்

செயலுக்கு ஆதியாம் விட்சேபம்

மோகத்துக்கு ஆதியாம் அம்மாயை – இன்னும்

முழுதும் கேளடி ஞானப் பெண்ணே

93

இன்னம் உண்டந்த வியாகிரு – தற்கும்

இரணிய கர்ப்பன் விண்ணுவிக்கும்

மின்னிய விராட புருடனுக்கும் – இன்னும்

மேலுண்டு சைதன்யம் ஞானப் பெண்ணே

94

சைதன்ய வித்துவே பிரமமடி – அந்த

சாட்சிக்குப் பிரதி பிம்பமடி

மெய்நின்ற சுத்த அறிவானால் – பிரதி

பிம்பத்தைத் தள்ளலாம் ஞானப் பெண்ணே

95

ஆமடி இந்தப் பதந்தானே - கண்டால்

ஆதியும் அந்தமும் நீ தானே

நாமடி வாசிக் குதிரையினால் – மிக்க

நல்ல கதியடி ஞானப் பெண்ணே

96-100[தொகு]

96

சாதிக் குதிரை வலுவே – கஞ்சரு

தாரு இருக்கிறான் மமமேலாக

வீதிக்கு வீதி சாரி வைத்தால் – பரி

வேடிக்கை பார்க்கலாம் ஞானப் பெண்ணே

97

கட்டுப் படாது அந்த அச்சுமட்டம் – அது

கககாலோ பன்னிரண்டு ஆகையினால்

எட்டுக் கயிற்றினால் கட்டிக் கொண்டால் – இது

மட்டுப் படுமடி ஞானப் பெண்ணே

98

கட்டுப்படுமோ மலவாயில் – நடு

மையத்தின் குண்டலி வாசியினால்

எட்டையும் நாலையும் கட்டியே – போற்றிடில்

ஏறி நடத்தலாம் ஞானப் பெண்ணே

99

சூட்சக் குதிரை அடங்காது – சுழிக்

கோட்டுக்குள் செல்ல முடியாது

மூச்சுக்கு ஆயிரம் காதவழி – மிக

முந்தி நடக்குதாம் ஞானப் பெண்ணே

100

குதிரை கட்டிய லாயத்திலே – மனக்

கோட்டையிலே சந்தைப் பேட்டையிலே

எதிரி தான் வந்து தட்டுகிறான் – அதை

ஏனென்று கேளடி ஞானப் பெண்ணே

101-105[தொகு]

101

காமன் எவருக்கும் மூத்தவனாம் – அவன்

கற்றிடும் வித்தைகள் மெத்த உண்டாம்

தாமதம் ஆன குரோதனும் – லோபனும்

தம்பியாம் கேளடி ஞானப் பெண்ணே

102

மோகம் மதம் இரு பிள்ளைகளாம் – ஒரு

மூர்க்கம் அமசியக் காரனோடு

சேகர வீரசை டம்பனும் - சம்பனும்

சிநேகம் ஆமடி ஞானப் பெண்ணே

103

சிநேகனுக்கு ஏற்ற உறவாளி – பொல்லாத்

தீயவன் ஆகுமோர் ஆங்காரி

அநேகத்தைச் செய்யும் அவதியில் – ரோசனும்

அத்தை மகனடி ஞானப் பெண்ணே

104

பெண்ணே கேளு பதின்மூன்று – ஆகிய

பேர்கள் உண்டு பகையாளர்

ஒன்றே ஒன்று வசமானால் – அவர்

ஒடுங்குவாரடி ஞானப் பெண்ணே

105

ஒடுக்கம் இல்லை இவராலே –பலன்

ஓட்டம் எல்லாம் மனக் கோட்டையிலே

படூ களத்துக்கு மேய்ந்து வரப் – பசு

பற்றுகிறார் அடி ஞானப் பெண்ணே

106-110[தொகு]

106

பாம்பு இருக்குது புற்றுக்குள்ளே – சுக

பந்தம் இருக்குது நெஞ்சுக்குள்ளே

வீம்பை அடக்கி உயர்ந்தக்கால் - பரி

வேடிக்கை பார்க்கலாம் ஞானப் பெண்ணே

107

பித்துப் பிடித்த மரக்குரங்கு – வெறிப்

பேயும் பிடித்து கொண்டாட்டம் இட்டால்

அத்தை அடக்க மருந்து செய்தால் – பரி

அன்று நடத்தலாம் ஞானப் பெண்ணே

108

நடத்தலாமே மன வாசி – ஒரு

நாலைந்து பீற்றரை மூடாமல்

திடத்தினால் மனம் சித்தானால் – சித்தந்

தெளிந்து கொள்ளலாம் ஞானப் பெண்ணே

109

தெளிந்த சித்தகம் பூட்டியதில் – சேணத்

தேறும் அறிவை அதில் சேர்த்துக்

குளிர்ந்து ஞான வைராக்கியக் – குறடா

கொண்டு மாட்டடி ஞானப் பெண்ணே

110

மூலத் தெருவில் ஒருபாய்ச்சல் – அந்த

முச்சந்தி வீதியில் ஓர்பாய்ச்சல்

மேலைத் தெருவில் ஒருபாய்ச்சல் – பரி

வேடிக்கை பார்க்கலாம் ஞானப் பெண்ணே

111-115[தொகு]

111

அந்த விதங்கள் அறியாமல் – மணி

மந்திரம் என்று திரிகின்றார்

அந்தரமான எழுத்து அறிந்தால் – மணி

மந்தரம் அல்லவோ ஞானப் பெண்ணே

112

மவுன மந்திரங் களினாலே – தங்கள்

வாய்தனை மூடித் திரிவார்கள்

புவன சாரம் புசிப்பார்க்கு – மதி

போசனம் ஆகுமோ ஞானப் பெண்ணே

113

தாயென்று சொல்லுவார் சொப்பனத்தில் – காம

சன்னதம் வந்தால் நினைப்பாரோ

வாய்கொண்டு வேதம் படித்தாலும் – சுத்த

மௌனம் தங்குமோ ஞானப் பெண்ணே

114

தாடி வளர்த்துச் சடைவளர்த்து – நல்ல

சந்யாசி என்றொரு வேடமிட்டே

ஓடித் திரிந்த விளையாட்டை இங்கே

ஒப்புவது ஆரடி ஞானப் பெண்ணே

115

பேசாது இருக்கும் இடம் பார்த்தே – அதைப்

பெற்றே இருப்பது மந்திரமாம்

ஆசான் என்றே உபதேசம் இட்டால் – குரு

அல்லவென்று கும்மி அடியுங்கடி

116-120[தொகு]

116

சொல் குருவாலே கதியாமோ – பொய்யைச்

சொல்லுவார் தங்கள் உறவாமோ

சற்குரு ஆனவரைச் சேர்ந்தே – அவர்

தம் சொல்லைக் கேளடி ஞானப் பெண்ணே

117

நானென்ற ஆணவம் பேசார்கள் – நல்ல

நாடென்றும் காடென்றும் சொல்லார்கள்

தானென்று யாவையும் கண்டாரே – நல்ல

சற்குரு வாமடி ஞானப் பெண்ணே

118

குரு இருப்பதும் உள்ளத்திலே – மனக்

கோணல் அறுப்பதும் தனக்குள்ளே

பொருள் இருப்பது அறியாமல் – புடம்

போடுவது எப்படி ஞானப் பெண்ணே

119

வாதம் செய்ய அறியாமல் – ரச

வாதம் செய்கிறோம் என்றுசொல்லிச்

சூதங் கெந்தி புடத்து விட்டால் – அதில்

சொன்னம் விளையுமோ ஞானப் பெண்ணே

120

லிங்கம் உருக்க அலைவார்கள் – சாதி

லிங்கம் இருப்பது அறியாமல்

வங்கமும் தங்கமும் சேர்த்து – உருக்கினால்

பங்கம் இது அல்லவோ ஞானப் பெண்ணே

121-125[தொகு]

121

பாசாணம் குகை தன்னில் வைத்து – வெள்ளைப்

பாலூட்டிக் குகை மூடி

ஈசானியப் புடம் இட்டாலும் – அதில்

இருப்பதென்னடி ஞானப் பெண்ணே

122

காரணமானது காரியம் ஆவதைக் – கட்ட

அறியார் முழு மூடர்

பூரணம் என்று திரிந்தாலும் – அதிற்

புண்ணியம் உண்டாமோ ஞானப் பெண்ணே

123

முப்பூ வென்று திரிவார்கள் – அந்த

முப்பூ வந்த வகைகாணார்

அப்பூ என்று அறிந்தக்காற் – சித்தி

ஆமென்று கும்மி அடியுங்கடி

124

காரத்தைக் கட்ட அறியார்கள் – கடுஞ்

சாரத்தை நீற்றினம் செய்யாமல்

வீரத்தைப் பூரத்தைச் சேர்த்ததனால் – அது

வீணல்லவோ சொல்லு ஞானப் பெண்ணே

125

கோச வித்தையை அறியாமல் – லோக

வேசத்தி நின்றும் அலைவார்கள்

கோச பீசம் அறிந்தாலே – வாதங்

கோசாரம் ஆமடி ஞானப் பெண்ணே

126-130[தொகு]

126

வாதத் திறவுகோல் காணாரே - பஞ்ச

பூதச் சரக்கையுந் தோணாரே

ஏதுக்குக் கண்புகைந்து ஊதுகின்றார் – இதை

ஏதென்று கேளடி ஞானப் பெண்ணே

127

துருக சுன்னம் முடிந்தாச்சே – அதைச்

சோதிக்க எட்டரை மாற்றாச்சு

பொருளைச் சொல்லிப் பணம்பறிப்பார் – இவர்

பொய்க்குரு அல்லவோ ஞானப் பெண்ணே

128

கவனி சூதம் முடிந்தது என்பார் – ஊசிக்

காந்தத்தைக் கிண்ணமும் செய்தோமென்பார்

புமனி வாதப் புரட்டாலே – அவர்

பிழைக்கிறாரடி ஞானப் பெண்ணே

129

பிழைக்க முத்தி அறியாமல் – சென்ம

பூர்வக் கியானந் தெரியாமல்

தழையைத் தின்று சருகாகித் – திசை

தயங்குறாரடி ஞானப் பெண்ணே

130

131-135[தொகு]

தயங்கி என்ன பலனாமோ – வனஞ்

சாதித்து நிற்கத் திறனாமோ

மயங்கிடாதே அழலை மகத்துவம்

வருவதெப்படி ஞானப் பெண்ணே

131

உப்பை அறிந்தவனே வாதி – சகத்

துப்பை யொழிந்தவனே யோகி

தப்பிலையே பூமி நாத – மகிமையைச்

சார்ந்து பாரடி ஞானப் பெண்ணே

132

வீட்டில் இருக்குது ஒருமூலம் – வெளிக்

காட்டில் இருக்கு திருமூலம்

மாட்டில் இருக்கும் பெரியோர்க்கு – ரச

வாதம் இதல்லவோ ஞானப் பெண்ணே

133

தோணாது என்ற சரக்கெடுத்துக் – கருஞ்

சூரா சூரையில் வைத்தெடுப்பச்

சாணான் கண்ட பொருள்போலே – சித்தி

தானென்று கும்மி அடியுங்கடி

134

நெல்லி இருக்குது காட்டுக்குள்ளே – கரு

நெல்லி இருக்குது வீட்டுக்குள்ளே

கொல்லி மலைக்குத் திரிந்தாலும் – குரு

கொண்டு வருவாரோ ஞானப் பெண்ணே

135

காயம் பட்டிக் குளத்துக்குள்ளே – வெள்ளைக்

காயா வேறு முளைத்திருக்கும்

வாயால் தின்று நிமிர்ந்தக்கால் – உடல்

மாயாது அல்லவோ ஞானப் பெண்ணே

136-140[தொகு]

136

கற்ப நிலையறிந்து எண்ணாமல் – வெறிக்

கஞ்சா உண்டு விழிப்பார்கள்

அற்பர் குகைமலை சென்றாலும் – அத்தை

அறியலாகுமோ ஞானப் பெண்ணே

137

கொங்கணர் சொன்ன கடைக்காண்டம் – அதிற்

சங்கை அறிவது பிரமாண்டம்

எங்கள் குருசட்டை மாமுனியார் – இரு

நூறும் பாரடி ஞானப் பெண்ணே

138

நூறில் உரைத்தது செய்ஞானம் – திரு

மூலர் உணர்ந்ததுவே ஞானம்

பூரண கும்ப முனி சொன்ன – சூத்திரம்

பூண்டகம் பாரடி ஞானப் பெண்ணே

139

தீட்சையில் மச்சமுனி தீட்சை – அவர்

செப்பின ஞானம் ஒருநூறும்

தாழ்ச்சி வாராது பெரியோரைக் – கண்டு

சாட்சி கேளடி ஞானப் பெண்ணே

140

ரேசக பூரக கும்பகத்தால் – வாசி

நேரிட்டுச் செய்வதும் ஆசையடி

கேசரமாகிய அத்வித பிரமம் - அத்தைக்

கிட்டிக் கும்மி அடியுங்கடி

141-145[தொகு]

141

உப்பை விடுவதும் ஆசையடி – அன்னம்

ஓர் பொழுது உண்பதும் ஆசையடி

செப்ப ஒண்ணாத மனோன்மணி – தேவனைச்

சேர்ந்து கும்மி அடியுங்கடி

142

வாசலிலே ஒரு மேல்வாசல் – அந்த

வாசலிலே சிறு வாசலுண்டு

நேசமுடன் சிறு வாசலில் – பூட்டியே

நெருக்கம் பாரடி ஞானப் பெண்ணே

143

தேசங்கள் போவதும் ஆசையடி – குல

தெய்வம் உண்டென்பதும் ஆசையடி

நேசம் எம்பிரம ஞான - சோதியைச்

சேர்ந்து கும்மி அடியுங்கடி

144

சமய பேதமும் ஆசையடி – கங்கா

ஸ்நான பூசையும் ஆசையடி

மமதை அற்று இருக்கின்ற – மமதையை

வாழ்த்திக் கும்மி அடியுங்கடி

145

பால் கறவாப்பசு தள்ளுங்கடி – பதி

பாசத்தையும் விட்டுத் தீருங்கடி

மேல் விளங்கிய தற்பர – சோதியை

வேண்டிக் கும்மி அடியுங்கடி

146-150[தொகு]

146

தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடி – வேத

சாத்திரப் பொத்தலை மூடுங்கடி

முத்தி தருஞான வத்துவை – வாவென்று

மூட்டிக் கும்மி அடியுங்கடி

147

ஆறா தாரமும் தொல்லையடி – அதற்

கப்பாலே ஒன்றும் இல்லையடி

சீராய் நின்ற நிலைபார்த்துப் – பெண்கள்

சேர்ந்து கும்மி அடியுங்கடி

148

சித்தர் சொற்படி சித்தானந்தம் – கண்டு

தெளிந்து கொள்ளடி வேதாந்தம்

தத்துவம் ஆகிய உற்பத்தி – சூக்குமச்

சார்பு கேளடி ஞானப் பெண்ணே

149

சார்புதான் என்னடி வேதாந்தம் – சொல்லுந்

தத்துவம் தான் இவ்வகையுடனே

காரணாதி அவத்தை நிலைகளின்

கணக்கு :உரைக்கிறேன் ஞானப் பெண்ணே

150

உரைக்கும் தத்துவம் நாலேழிற் – கண்ட

ஓதும் சித்துரு நாலாறா

மறைக்குள் சொல்லிய சித்துரு - நாலாகும்

மகிமை பாரடி ஞானப் பெண்ணே

151-155[தொகு]

151

மகிமை ஆகிய தொம்பதமாம் – அதில்

வந்த உபாதி உணர்த்துகிறேன்

தகைமை என்ன முன்சொன்ன – வசித்திருத்

தன் செயல் கேளடி ஞானப் பெண்ணே

152

வாசல் மிகுந்த உடம்போடு - ப்ராண

வாயுவோடு இந்திரியம் ஆனதென்று

காசலை யாமதி சேர்ந்து வளர்ந்த – தன்

காரணம் நாலடி ஞானப் பெண்ணே

153

காரணம் என்பது இவையேழும் – வந்து

கலந்த தாமடி தொம்பதத்தைக்

தாரண தொம்பதம் ஆன –துரியத்தில்

தன்னுடல் ஆச்சுதாம் ஞானப் பெண்ணே

154

தன் உடலாகிய சாக்கிரத்தை –தன

தாக இருந்திடும் ஆத்துமற்குப்

பின் சொல்வதாம் விசுவனென்ற – அபிமானப்

பேரல்லோ சொல்லடி ஞானப் பெண்ணே

155

பேர் பெறும் எந்தரமும் பாதியுடன் –கூடப்

பெற்றிடு சூட்சுமச் சொப்பனத்தின்

சார்பில் இருந்த துரியற்கு – நாமமுஞ்

சைத்தன்யமடி ஞானப் பெண்ணே

156-160[தொகு]

156

ஆகும் பிராண நல்லவாயுய - -உடன்கூடி

அடங்கி மூலத்துடன் சேர்ந்து

சேகரமா வந்த நாத - துரியத்தைச்

சேர்ந்திடிற் காரண தேகமடி

157

சேர்ந்த அவத்தைச் சுழுத்தியடி – அதைச்

சேர்ந்தவனும் பிராக்ஞன் ஆகுமடி

கூர்ந்த மூன்றையும் கண்ட – துரியத்தைக்

கும்பிட்டுக் கும்மி அடியுங்கடி

158

கும்பிட்டுத் தொம்பத சித்தார்த்தம் – கண்டு

கூறிய ஞாயம் இது போல

அம்பிட்டுத் தற்பதம் ஆன -- விவேகத்தை

அறியச் சொல்லுவேன் ஞானப் பெண்ணே

159

அறிவது என்னடி தொம்பதமாம் - பொருள்

ஆன உபாதியும் ஆனது பொல்

சருவ தற்பர மான – பொருளுக்குத்

தன்னுடைச் சீவன் துரியமடி

160

சர்வஞ் ஞனுஞ் சருவக் – காரனுஞ்

சரு வேந்திரி யாம் சர்வேசுரனுஞ்

சர்வ சிருட்டி சுர்வதி – சர்வ

சங்காரனும் பேராம் ஞானப் பெண்ணே

161-165[தொகு]

161

பேரானது என்ன இவையேழும் – மிகப்

பேசிடில் வேதம் துரியமடி

தோரா உபாதியைப் பெற்றதனால் – முத்தி

தூசணம் உண்டாச்சு ஞானப் பெண்ணே

162

தூசணச் சீவன் இவையேழும் – கண்டு

சொல்லும் பரனுக்கு உடலாச்சு

சாசுவதம் என்ற தானத்தினால் – சாயா

கிரகம் என்றுபேர் ஞானப் பெண்ணே

163

சாக்கிரந் தன்னைத்தான் என்றுசொல் – வியப்பால்

தான் அபிமானித் தருந்தாக்காற்

சேர்க்க விராட்டெனச் சொல்லுவார் – நாமந்

தெரிந்து கொள்ளடி ஞானப் பெண்ணே

164

தெரிந்த மூன்றனு பாதியுமாம் – அதிற்

சேர்ந்த பரன்பர சொப்பனமாம்

பிரிந்திடாத அபிமான இரணிய - கற்பன்

என்பாரடி ஞானப் பெண்ணே

165

பாரும் இதிலொரு பாதியுடன் – பரா

பரனுக்கு அல்லவோ பார்சுழுத்தி

சேரும் பொழுது வியாகிருதன் - எனச்

சிந்தையில் காண்டி ஞானப் பெண்ணே

166-170[தொகு]

166

காணடி தற்பர சத்தார்த்தம் – அதைக்

கண்டு தெரிந்த வகைபோல

ஊணடி ஞான சிவ – பதார்த்தில்

உண்மையைக் கேளடி ஞானப் பெண்ணே

167

உண்மையாந் தற்பர நற்றுரியம் – கண்டும்

உற்றுப் பாராதொரு தோடமதால்

தண்மைச் சிவபத சுத்தனுக்குப் – பரன்

தன்னுடல் ஆச்சுது ஞானப் பெண்ணே

168

ஓதும் பரம் விஸ்வ கிராசம்மடி – உப

சாந்தம் எனுவகை மூன்றிலொன்றைச்

சாதனை செய்த சிவத்துக்கல்லோ – பர

சாக்கிரம் ஆகுமே ஞானப் பெண்ணே

169

ஆகும் பொருள் சிவ சாக்கிரத்தை – அபி

மானித்திருந்த சிவ துரியம்

சேகரம் ஆயிடிற் சிற்சொலிதை – என்று

செப்பிடும் வாக்கியம் ஞானப் பெண்ணே

170

வாக்கியமாம் விஸ்வ கிராசமடி - அந்த

மார்க்கம் என்ன சிவ சொப்பனத்தை

பாக்கியன் அபிமானிடத்திற் பிரசா

பத்தனென்று சொல் ஞானப் பெண்ணே

171-175[தொகு]

171

சொல்வதும் என்ன உபசாந்தஞ் – சிவ

சுழுத்தி தானென்று இருந்தக்கால்

நல்லது பொற்புறு சாந்தன் – என்றாலது

நாமம் அதல்லவோ ஞானப் பெண்ணே

172

நாமச் சிவ துரியத்திலடி – அபி

மானம் இழந்து தவித்ததனால்

நேமம் இதல்லவோ ஆதி – துரியத்தின்

நிலைமை கண்டிலர் ஞானப் பெண்ணே

173

கண்டு அறியாதது முற்றிரியம் – அதைக்

கண்டு சுழன்று மேலானதடி

பண்டு பிரம ஆனந்த – சொரூபத்தைப்

பணிந்து கும்மி அடியுங்கடி

174

பணிந்த ஞானமது தாண்டி – பர

மானந்தம் ஆனது இதுதாண்டி

துணிந்து பாரும் ஆனந்த – சொரூபனைத்

தொழுது கும்மி அடியுங்கடி

175

தொழுது கொள்ளுஞ் சுகசிவ – பர

சுத்தப் பொருளும் இதுதாண்டி

பழுதிலாத சொரூபக் குரு - உடைப்

பாதம் இதல்லவோ ஞானப் பெண்ணே

176-180[தொகு]

176

பாதம் இதாகிய தொம்பதமாம் – அதிற்

பாதமும் தற்பரம் ஆனதடி

பேதவு பாதி அவத்தைகளும் – பல

பேர்களும் ஆனது ஞானப் பெண்ணே

177

பேருக்குச் சார்ந்த துரியமடி – அதைப்

பேசவும் தற்பிர காசமடி

யாருக்கும் கண்டு அறியாத பொருளைக்

கண்டகந் தெளிந்து கும்மி அடியுங்கடி

178

முத்தி பெறுந்தேவ தத்தனைப் – போற்சக

முழுதும் தன்மயம் ஆனதடி

நததியே விட்டு விடாதே – இலக்கண

ஞானம் இதல்லோ ஞானப் பெண்ணே

179

ஞானமாம் மோட்சம் இதுதாண்டி – மற்ற

ஞாயம் எல்லாம் மனமாயமடி

தான சங்கற்ப விகற்ப – சமயமுந்

தன்மயம் ஆனது ஞானப் பெண்ணே

180

தூர தூரமும் இல்லையடி – அதைச்

சொல்வதும் கேட்பதும் இல்லையடி

தாரார் பிரமநிலை பார்துதுப் – பெண்கள்

தாண்டிக் கும்மி அடியுங்கடி

181-185[தொகு]

181

அண்டமும் பிண்டமும் பாழாச்சே – அதற்

கப்பாலும் பெரும் பாழாச்சே

உண்டில்லை என்று பராபரப் – பிரமத்தை

உவந்து கும்மி அடியுங்கடி

182

சொல்லினும் கல்லினும் நில்லாதே – பிரம

சோதியை ஆதியைத் தூவெளியை

வல்ல தத்தற் பிரகாச – மவுனத்தை

வகை அறிந்துகொள் ஞானப் பெண்ணே

183

பிருதிவி தூய்மை மயமாச்சே – அதில்

பேதம் பலபல உண்டாச்சே

சுருதி முடிவை குரு சொல்லுவார் – அந்தச்

சூட்சந் தெரியுமோ ஞானப் பெண்ணே

184

அறிந்து கொண்ட பெரியோர் – பாதங்கள்

அர்ச்சனை செய்து கும்மித் தமிழைப்

பரிந்திடாமல் நூற்றெணபத்து ஐந்து – கண்ணி

பேசினேன் சற்குரு தாள் வாழி

185

சற்குரு பாதம் மிகவாழி – வாலை சாமி

தமிழ் நிதந்தான் வாழி

நற்குண ஞானக் கும்மித் தமிழ் -கற்றவர்

ஞான நெறியே மிகவாழி

மதுரை வாலைசாமி ஞானக்கும்மி முற்றும்