பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லாம். எனக்கு உங்களை ரொம்பவும் பிடித்துவிட்டது. சில வேளைகளில் என்னோடு உலாவக்கூட வரலாம்; வேட்டையாடக் கூடச் செல்லலாம்...”

றுநாள் குழந்தைகளுடன், ஜெமீன்தாரருடைய இரண்டு குமாரிகளும் வந்து சேர்ந்தனர். சொக்கலிங்கத்தை ஜெமீன்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

லலிதாம்பிகேஸ்வரி, உமாமகேஸ்வரி ஆகிய இருவருமே, தங்களை ஊரார் அழைப்பதுபோல இராஜகுமாரி என்று ஆசிரியரும் அழைப்பதை விரும்பவில்லை என்று கூறக்கேட்டு, சொக்கலிங்கம், வியப்படைந்தான்.

குருபக்தி உணர்ச்சியாக இருக்குமோ என்று முதலில் யோசித்தான். ஆனால் ஜெமீன் மாளிகையில் பூஜை செய்ய வருபவரிடம் அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, தன்னிடம் மரியாதையும் அன்பும் காட்டுவதற்குக் காரணம்,டேவிட் துரையிடம் பல வருஷங்கள் பழகியவன் என்பதுதான் என்று தெரியவந்தது.

ஆங்கிலேயர்கள் ஐயாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து இங்கு வந்து ஆட்சி நடத்துகிறார்கள் என்பதாலேயே, இப்படிப்பட்ட ஜெமீன்கள் ஆங்கிலேயரிடம் மிகுந்த பயபக்தி விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதும், ஆங்கில அரசினரிடம் மட்டுமல்லாமல், ஆங்கிலப் பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகியவர்களிடமும் அதிக அளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதையும் உணர்ந்தான்.

அந்நியருக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்று வருத்தமும் வெட்கமும் துளியும் அவர்களுக்கு இல்லாததையும், ஆங்கிலேயர்களைப்போலத் தாமும் கோலத்தை ஆக்கிக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டிருப்பதையும் அறிந்து வருந்தினான்.

ஆங்கில நாட்டு வரலாறு படித்திருந்தால், இவர்கள் இப்படியா இருப்பார்கள்; அடிமைத்தனத்தை ஆங்கில மக்கள் எவ்வளவு வெறுத்திருக்கிறார்கள்; அடிமைத்தனத்தைப்