9.கோடேறிக் குடிமுடித்த படலம்
Jump to navigation
Jump to search
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]
நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]
ஓர் அங்கதக் காவியம்[தொகு]
9. கோடேறிக் குடிமுடித்த படலம்[தொகு]
(வரிகள்: 01-50)[தொகு]
- ஐயோ! ஐயோ! அடங்கா வீர
- பத்திரப் பிள்ளை, (அப்பாவி பாதக,என்
- குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன்
- அரக்கன் ஏழரை ஆண்டைச் சனியன்)
- விரைவில் ஓடி வீட்டில் சென்று, (05)
- மனைவியை அழைத்து மண்டையைக் காட்டிஉன்
- அண்ணன் அடித்த அடிகளைப் பாரடி!
- இன்றைக்கு
- உயிர்போ காமல் இருந்தது உன்தாலிப்
- பாக்கியம் தானடி, பகவான் செயலடி! (10)
- அவன், எண்ணிப் பாராது ஏசின ஏச்சில்
- கடுகள வேனும்உன் காதில் விழுந்தால்நீ
- நஞ்சைத் தின்பாய் நான்று சாவாய்
- நாக்கைப் பிடுங்கி நடுங்கி இறப்பாய்
- ஆற்றில் குளத்தில் அலறி விழுவாய்,
- சங்கிலித் துறைபோய்ச் சாடி யொழிவாய்,
- இதற்கோர் ஐயம் இல்லையே!
- என்னைப்
- பறைப்பயல் பள்ளப் பயலினும் கேடாய்
- நினைத்துப் பேசின நீசன் இவனை (20)
- வாயில் மண்ணை வாரி யடித்து
- வீட்டை விட்டு வெளியி லிறக்கின
- அன்றைக்(கு) அல்லவோ ஆண்பிள்ளை யாவேன்?
- என்று பற்பல இன்னும் சொல்லிக்
- கோபா வேசம் கொண்டவ னானான். (25)
- கூட இருந்த குசும்பன் சாமி
- போதா தென்று புகையும் போட்டான்
- வீணாய்க் கதையை விரிப்பதேன்? அம்மா!
- அப்பனும் மகனும் அண்டை வீட்டுக்
- குசும்பன் சாமியும் குண்டுணிச் சுப்புவும் (30)
- கோட்டு மாடன் பிள்ளையுங் கூடி
- இரவும் முழுதும்இருந்து யோசனை
- பலவும் செய்து, பலபல வென்று
- விடியு முன்னம் விரைவா யெழுந்து
- பானையில் கிடந்த பழவோ லைகளும் (35)
- முறிப்பெட்டி யிலுள்ள முன்னோ லைகளும்
- கைச்சீட் டுகளும் கடச்சீட் டுகளும்
- கைச்சாத் துகளும் பொய்ச்சாத் துகளும்
- பத்திரச் சுருளும் பகர்ப்புச் சுருளும்
- எல்லாம் சுமடாய்க் கட்டி இரண்டொரு (40)
- முண்டைப் போட்டு மூடிப் பொதிந்து
- தோளில் வைத்துச் சுமந்து கொண்டு
- நாகையம் பதியை நாடிச் சென்றனர்
- அங்கு
- நீதிக் கெல்லாம் நிலைய மாகியும் (45)
- உண்மைக் கெல்லாம் உறைவிட மாகியும்
- கருணைக் கெல்லாம் களஞ்சிய மாகியும்
- வாழும் நியாய வாதிகள் தங்கும்
- வீதியை முற்ற விலகிச் சென்று,வீண்
- விவகா ரங்கள் விளைநில மாகியும் (50)
(வரிகள்: 51-100)[தொகு]
- பொய்கள் அடைக்கல புகுமிட மாகியும்
- குதர்க்கம் கடிகொளும் குகையிட மாகியும்
- திருஅவ தாரம் செய்தன் றிருந்தவோர்
- அண்டப் புரட்டன் வக்கீல் ஆபீசில்
- ஆனைப் பொய்யன் குமஸ்தனை அறிந்து (55)
- காரியம் சொன்னார், கதைகளும் சொன்னார்
- ‘காரண வனைப்பல காரணத் தாலே
- மாற்றும் படிக்கு வந்தோம்’ என்றார்
- புற்றை விட்டுப் புறம்போ காமல்
- பட்டினி கிடக்கும் பாம்பின் வாயில் (60)
- தேரை குதித்துச் சென்று விழுவது
- நாகம் முன்செய்த நல்வினைப் பயனோ?
- தேரை முன்செய்த தீவினைப் பயனோ?
- ஈதெனச் சொல்ல எவரால் ஆகும்?
- செல்லும் செலவு செய்திட, ரூபாய்
- நூற்றைம் பதுக்கோர் நோட்டு, வக்கீல்
- மைத்துனன் முத்து வாத்தியார் பேர்க்கு
- எழுதி முடித்தார், எடுத்து வந்த
- ஆதா ரங்கள் அனைத்தும் கொடுத்தார்,
- இவரிவர் சாட்சிகள் என்றும் சொன்னார்; (70)
- வெள்ளை மடத்துக் கள்ள பிரானெனும்
- மூத்த பிள்ளையே முதலாம் சாட்சி;
- மாத்தால் கணக்கு மகாரா சன்மகன்
- பிச்சைக் காரன் பின்னொரு சாட்சி;
- இருக ணில்லா இருளப் பன்மகன் (75)
- முத்தொளி மறவன் மூன்றாம் சாட்சி,
- ஐயம் பிள்ளை அண்ணாவி புதல்வன்
- நல்ல பிள்ளை நாலாம் சாட்சி;
- பொய்சொலா மெய்யன் புத்திரன் மாறி
- யாடும் பெருமாள் ஐந்தாம் சாட்சி; (80)
- நம்பர் பதித்த நாலாம் மாதம்
- ஒருநாள் காலை உறக்கப் பாயில்
- எழுந்(து)என் கணவர் இருக்கும் பொழுது
- கருப்பன் கட்டையன் கப்படா மீசைக்
- காரன் ஒருவன் காலனைப் போல (85)
- கோர்ட்டு சம்மனைக் கொண்டு வந்தான்!
- நச்சுவா யண்ணன் நாச காலன்
- வீர பத்திரன், வெட்டையாய்ப் போவான்,
- எண்ணியது போல எல்லாம் ஆச்சுதே,
- நினைத்தது போல நேரம் விடிந்ததே! (90)
- இந்நாள் இங்கு யான்படும் பாடெலாம்
- நாளை
- அவரும் மக்களும் அனுபவிப் பார்கள்
- யாதும் தடையிலை, யாதும் தடையிலை;
- பத்தினி என்சொல் பழுதா காது, (95)
- உத்தமி யென்சொல் ஊரையும் சுடுமே!
- கேட்கும் கேட்கும், தெய்வம் கேட்கும்!
- சேவகன் வந்த காரியம் தெரிந்தோ,
- இயல்பாய்த் தானோ, (யாதோ அறியேன்)
- மேல வீட்டிருந்து வெள்ளையம் பிள்ளை (100)
(வரிகள்: 101-150)[தொகு]
- அண்ணனும் அப்பொழு(து) அங்கு வந்து,
- ‘யார்இவன்’ என்றனர், ‘இன்னார்’
- சம்மனைப் படித்துச் சங்கதி யறிந்துஎன்
- புருஷனை நோக்கி, “போன தெல்லாம்
- போகட்டும் ஐயா! பொய்கைப் பற்றில்
- ஆறு தடியும் அணஞ்சி விளையும்
- துலுக்கன் தோப்பும, தொட்டிச்சி மேடும்
- மேலத் தெருவில் மேடை வீடும்,
- ஈரணை ஏரும் ஏழு பசுவும்,
- யாதொரு கடனும் இல்லா மல்நீர் (110)
- இருக்கு மட்டும் யாப்பிய மாகவும்
- அப்பால் அவற்றைஉம் அருமை மக்கள்
- ஒன்று விடா(து)உகந் துடைமை யாகவும்
- எடுத்துக் கொள்ள ஓர்ஓலை யெழுதி
- உம்மை மக்களோடு ஒதுக்கி விடுவரேல் (115)
- வாங்கிக் கொண்டு வழக்கில் லாமல்
- சும்மா இருப்பது மெத்தச் சுகமாம்
- இப்படி ராஜி எழுதிக் கொடுக்க
- உமக்குச் சம்மத முண்டோ? சொல்லும்.
- வியாச்சிய மென்னும் சுழியில் விழுந்து (120)
- கறகற வென்று கறங்கி மயங்கி
- கைப்பொருள் இழந்து கடனும் வாங்கி
- வீணாய்த் துன்பம் விளைத்திட வேண்டாம்!
- அல்லலை விருந்துக்கு அழைத்திட வேண்டாம்!
- தொல்லைக்குத் தூது சொல்லிட வேண்டாம்! (125)
- ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
- ஐயோ! கோர்ட்டுக்கு ஆரே போவார்!
- பண்டொரு நீதி பதிதம் கோர்ட்டு
- வாயிலின் வந்த மனித ரெல்லாம்
- உடைந்த ஓட்டை ஒருகையி லேந்தி (130)
- வழக்கு இழந்தவன் வாடி நிற்பதையும்
- தாட்பொதி யொன்று தலையிற் சுமந்து
- வென்றவன் உடலம் மெலிந்து நிற்பதையும்
- கண்களால் கண்டு, கண்டு நாளும்
- நல்லறிவு எய்திட நடைநடை தோறும் (135)
- இருபுறச் சுவரிலும் இரண்டு உருவங்கள்
- செய்து வைத்த கதைதெரி யாதோ?
- இழந்தவர் வென்றவர் இருவர் மீதியும்
- இவைக ளன்றிவே(று) எவையும் உண்டோ?
- புத்தி யில்லாஇரு பூனைகள் பண்டு (140)
- வானரத் திடம்போய் வழக்குச் சொல்லி
- உள்ளதும் இழந்துவே றுணவும் இன்றி
- வெறுங்கை யாகி வெட்கி மீண்டதாய்
- நாம்,
- பள்ளியில் பாடம் படிக்க வில்லையோ? (145)
- கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்.
- அரையடிச் சுவருக் காகஐக் கோர்ட்டு
- வரையிலும் ஏறி, வழக்குப் பேசி
- அந்தி புரத்து மந்திரம் பிள்ளை
- அடியொடு கெட்டது அறியமாட் டீரோ? (150)
(வரிகள்: 151-200)[தொகு]
- வடக்கு வீட்டு மச்சம் பியும்அவர்
- மருமக் களுமாய் வருசம்எட் டாக
- மாறி மாறி வாதம் செய்து,
- யாவையும் போக்கி, இரவா வண்ணம்
- இரந்து திரிவதை இவ்வூ ரில்நாம் (155)
- கண்ணால் இன்று காண வில்லையோ?
- வேலுப்பிள்ளை வீட்டு நம்பரில்
- ஐந்தாம் சாட்சி ஆண்டி அவனை
- அழஅழப் படுத்தி, அறுபது ரூபாய்
- வாங்கிக் கொண்டு, மேல்வாயிதாத் தோறும் (160)
- ‘வீட்டுக் காரியம் வெட்ட வெளிச்சம்
- முட்டப் பஞ்சம், மூதேவி வாசம்
- பானையி லேபத் தரிசி இல்லை!
- உப்போ புளியோ ஒன்று மில்லை!
- உச்சிக்கு எண்ணெய் ஒருதுளி யில்லை! (165)
- தொட்டில் கட்டத் துணியு மில்லை,
- காந்தி மதிக்குக் கண்டாங்கி இல்லை,
- எனக்கும் வேட்டி யாதொன்று மில்லை,
- இப்படி யிருக்க, எப்படி உமக்காய்
- கோர்ட்டில் மொழிநான் கொடுக்க வருவே?’ (170)
- என்று சொல்லி, எத்தனை பணத்தைத்
- தட்டிப் பறித்தான் சண்டாளன், அப்பா!
- முளைய நல்லூர் முதல்பிடிப் பிள்ளை
- அண்ணனும் இப்படி யாகக் காரணம்,
- விளாத்திக் கோண விவகார மல்லவோ? (175)
- எத்தனை வகையை இழந்தார், அப்பா!
- மூக்கறை யன்விளை மூலையில் நிற்கும்
- பலாமர மொன்றுமே பத்துக் குடும்பம்
- தாங்கி,மீதியும் தருமே, அப்பா!
- அந்த,
- மதினி கழுத்தில் மங்கிலியம் தவிர
- எல்லா நகையும் இறக்கிவிட் டாளே!
- ஒவ்வொரு காதிலும் உழக்குழக் குப்பொன்
- இட்டிருந் தாளே! எல்லாம் போச்சே!
- ஆளும் வேற்றாள் ஆகி விட்டதே! (185)
- கருந்தாளி உலக்கை கையில் எடுத்(து)அவள்
- கோவில் நெல்லைக் குத்துவாள் என்று
- யாவ ராயினும் எண்ணினது உண்டா?
- என்ன செய்வாள், ஏழை! பாவம்!
- நட்டியும் குட்டியும் நாழியும் உழக்குமாய் (190)
- ஏழு மக்களை எப்படி வளர்ப்பாள்?
- கோர்ட்டு வழக்குக் கொஞ்சமா செய்யும்?
- இதுவும்செய்யும் மேலே எதுவும் செய்யும்;
- கட்டுக் கட்டாய்க் காய்கறி யனுப்பவும்
- வல்லம் வல்லமாய் மாம்பழம் அனுப்பவும் (195
- பானை பானையாய்ப் பால்நெய் யனுப்பவும்
- மந்தை மந்தையாய் மாடுகள் அனுப்பவும்
- வண்டி வண்டியாய் வைக்கோல் அனுப்பவும்
- யாரால் முடியும்? யாரால் முடியும்?
- எந்தக் குடும்பம் ஈடு நிற்கும்? (200)
(வரிகள்: 201-250[தொகு]
- ஐயா,
- வழக்கும் இழந்து, வகையும் இழந்து
- யாவும் இழந்து உளம்ஏங்கி யிருக்கும்
- கைலாசம் பிள்ளைக் கரையாளன் வீட்டை
- வக்கீல் பீஸு பாக்கி வகையில் (205)
- எழுபது ரூபாய்க்கு ஏலம் கூறிக்
- கொட்டிக் கொட்டிக் கொண்டு போனதும்
- நேற்றுத் தானே, நினைவு மில்லையோ?
- இந்த மாசம் எட்டாந் தேதி
- மேலத் தெருவில் .... வீட்டில் (210)
- ஜப்திக்கு வந்த தலைவன், ஐயோ
- எள்ளள வேனும் இரக்கமில் லாமல்
- அந்தக்
- கிழவனைத் தூக்கிக் கீழே போட்டுக்
- கட்டிலை வெளியில் கடத்தச் சொன்னதும், (215)
- தண்ணீர் குடிக்கும் சமயம் பார்த்துப்
- பிள்ளைக் கெண்டியைப் பிடுங்கச் செய்ததும்
- சருவப் பானை சட்டுவம் அகப்பை
- குட்டுவம் செம்பு குழியல் முதலாய்
- உப்பொடு சிரட்டை ஒன்றுமில் லாமல் (220)
- எல்லாம் வண்டியில் ஏற்றிச் சென்றதும்
- நாம்
- கண்ணாற் கண்டதோ? கனவோ? ஐயா!
- நாமெலாம் சேர்ந்து நடத்தின கட்சிக்
- கொடையில், மாடன் கொண்டாடி நம்பி (225)
- சந்தனம் பூசிச் சல்லடம் கட்டிப்
- பூவை யெடுக்கப் போன பொழுது
- வாரண்டுக் காரன் வந்ததை யறிந்து
- குட்டிச் சுவரெலாம் குதித்துச் சாடி,
- வாய்க்கால் வழியே வடக்கே யோடி (230)
- ஒருவரும் காணாது, ஓச்சன் குளத்து
- மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்
- ‘சாமி சுடலைச்சாம்பலி லாடி
- விளையா டுதற்கு வேகமாய்ப் போகிறார்’
- என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம் (235)
- எழுந்து போனதும், எங்கும் தேடிக்
- காணா தானதும், கடைசியில் உண்மை
- தெரிய வந்ததும், செலவோடு செலவென்று
- ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
- வாரண்டை அன்று மடக்கி விட்டதும் (240)
- நடந்த காரியமோ? நாடகந் தானோ?
- வியாச்சியம் வேண்டாம் வியாச்சியம் வேண்டாம்,
- தேடின முதலைத் தெருவில் வாரி
- இறைக்க வேண்டாம், இறைக்க வேண்டாம்.
- அல்லும் பகலும் அலுப்பில் லாமல் (2450
- ஆஆ என்(று)அலை ஆமீன் வாயில்
- அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
- சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்
- பொல்லா மீன்இது போலொரு மீனைக்
- கடலிலும் கூடக் கண்டவ ரில்லை. (250)
(வரிகள்: 251-300)[தொகு]
- ‘எவரினும் பெரியவன் யானே ஆவேன்,
- எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்
- இம்மிருகத் தையும் எடுத்தொரு நொடியில்
- வானெலாம் சுற்றி வருவதற் குள்ள
- ஆற்றலு முடையேன், ஆனால், அத்திறம் (255)
- அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட
- அற்பமும் ஆசை எனக்கிலை, அன்றியும்
- உருவமோ, நீளமோ, உயரமோ கண்டே
- மூட உலகம் மோசம் போகும்;
- ஆதலால் ஒருவரும் அறியா திருந்(து)இந் (260)
- நாலுகை யானை நடத்து கின்றேன்’
- என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று
- எண்ணா(து) டம்பம் எடுத்துரைப் பதுபோல்,
- ‘இரவும் பகலும் இடைவிடாமல்
- பற்பல வருசம் படித்து பீ.எல்
- எம்.எல் பட்டம் எல்லாம் பெற்று
- வந்திடும் பெரிய வக்கீல் மாரும்
- யாங்க ளில்லையேல் என்செய் வார்?’எனப்
- புத்தி யில்லாது புலம்பித் திரியும்
- குமாஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் (270)
- குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா!
- கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
- குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்!
- இன்ன படியென்று எழுதி விட்ட
- சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன், (275)
- விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்,
- வருகிற வழியாய் வந்(து)எனைக் கண்டால்
- சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித்
- தருவேன்’ என்று சற்றும்வாய் கூசாது
- உரைக்கும் அந்த உத்தம புருசன் (280)
- நிறையா வயிற்றை நிறைந்திடக் கடலைத்
- திறந்துவிட் டாலும் திகையுமோ? ஐயா!
- வீட்டை விட்டு வெளிவரா உமக்குக்
- கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ?
- பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் (285)
- சாட்சிப் படிகளும் சமன்சுப் படிகளும்
- கணக்கி லடங்காக் கமிசன் படிகளும்
- ஜப்திப் படிகளும் லேலப் படிகளும்
- வாரண்டுப் படிகளும் வாசற் படிகளும்
- ஏணிப் படிகளும், இப்படி அப்படி (290)
- எல்லாப் படிகளும் ஏறி இறங்கி
- வாணாள் கொடுத்து வாண தீர்த்தம்
- ஆட ஆளும் நீரோ? ஐயா!
- கோர்ட்டுப் பீசு குமாஸ்தாப் பீசு
- கூடிக் காப்பி குடிக்கப் பீசு (295)
- வெற்றிலை வாங்கிட வேறொரு பீசு
- வக்கீல் பீசு மகைமைப் பீசு
- வக்கா லத்து வகைக்கொரு பீசு
- எழுதப் பீசு சொல்லப் பீசு
- எழுதிய தாளை எடுக்கப் பீசு (300)
(வரிகள்: 301-350)[தொகு]
- நிற்கப் பீசு, இருக்கப் பீசு
- நீட்டின கையை மடக்கப் பீசு
- பாரப் பீசு கீரப் பீசு
- பார இழவு பயிற்றுப் பீசு
- கண்டு பீசு, காணாப் பீசு (305
- முண்டுத் துணிக்கொரு முழுமல் பீசு
- அந்தப் பீசு, இந்தப் பீசு
- ஆனைப் பீசு, பூனைப் பீசு
- ஏறப் பீசு இறங்கப் பீசு
- இப்படி யாக என்றென் றைக்கும் (310)
- பீசு பீசாகப் பிச்சி எடுக்கும்
- கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்!
- குதித்துக் குடியை முடித்திட வேண்டாம்!
- மூவலகேத்து மூவரும் நாணப்
- பொது‘ரிக் கார்ட்டு’ப் புரையில் தனியாய் (315)
- ஓர்மூலையில் இருந்து முத்தொழில் இயற்றும்
- தெய்வத் தின்இரு சேவடி நிதமும்
- கண்டும் தொழுது காணிக்கை யிட்டு
- வணங்கா தவர்க்கு வருந்தோ சங்கள்
- இத்தனை யென்றிட யாரால் முடியும்? (320)
- இதற்கெலாம் முதலுக்கு எங்கே போவீர்?
- வஞ்சியை முறித்து வாரப் போவீரா?
- வாதி பாகத்து வக்கீல் உம்மைக்
- கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்க்
- ‘கிராசு’ கேட்டுக் கிடுக்கி விடுவான் (325)
- சந்தேக மில்லை, சந்தேக மில்லை
- நீர்,
- அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்,
- புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்;
- ஆளும் தரமும் அறிந்திட வல்லவர் (330)
- சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்
- ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பவர்,
- பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பவர்,
- தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்,
- இரைந்து சொல்லுவார், எச்சில் எழுப்புவார், (335)
- பார்ப்பார் என்பார், பல்லைக் கடிப்பார்
- போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்,
- அங்கும் இங்கும் அசையாதே என்பார்,
- குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார்,
- கோட்டையும் கூடக் கூட்டாக் காமல் (340)
- கேள்விகள் பலவும் கேட்க வருவார்.
- ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
- ஒன்றா? இரண்டா? உடன்சொலும் என்பார்!
- நாம்
- ‘குதிரைக்கு ஏது கொம்புகள்?’ என்றால்
- அது
- கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்,
- ‘கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்
- இரண்டா? ஒன்றா? என்பதுஎன் கேள்வி;
- உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம் (350)
(வரிகள்: 351-400)[தொகு]
- கேட்டே னாஓய்? காதுகேட் காதோ?’
- என்றெலாம் சொல்லி ஏமாற்றி விடுவார்,
- குண்டில் விழுந்த குள்ள நரியைப்
- படுத்தும் பாடெலாம் உம்மைப் படுத்துவார்,
- இவர்,
- ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால்
- பீரங்கிகளும் பின்னிட் டோடும்
- பொல்லாதவர்அவர், பொல்லா தவர்அவர்.
- ‘இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்
- இணையா வாரோ! இணையா வாரோ? (360)
- அறிந்து பிழையும் அறிந்து பிழையும்
- சொந்த வீட்டில துரும்பையும் தூக்கி
- எறியச் சற்றும் இயலாது என்பவர்,
- வக்கீல் வீட்டில் வரிக்கல் பிடுங்கப்
- போவதும் எத்தனை புத்திகேடு ஐயா! (365)
- தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து
- வயிற்றுக்கு இன்றி வாடி யலைய
- வருக்கை மாம்பழமும் வாழைப் பழமும்
- பெட்டிப் பாலும் பிஸ்கோத் துகளும்
- ஊரார் மக்கள் உண்டு களித்திட (370)
- வாங்கிச் செல்வது மதியுளோர் செயலோ?
- மேடும் காடும் ‘வெட்டித் திருத்திப்
- பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப்
- பருவம் அறிந்து பண்பட உழுது
- மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து (375)
- வாசிறை மீண்டான் வளரச் செய்து
- சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து
- காலா காலத்தில் களைகள் எடுத்து
- வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப்
- பறைகளைக் கொட்டிப் பறவையை ஓட்டி, (380)
- நீரும் பாய்ச்சி, நிதமும் இராப்பகல்
- உறக்க மின்றி உழைப்ப தனாலே
- விளையச் செய்த மேனிநெல் எல்லாம்
- வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய்
- விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி (385)
- அளந்து வாரி அறைக்குட் போட்டு
- வெறுங்கை யோடு வீடுபோய்ச் சேரும்
- நம்மவர் போலிம் மாநிலத் தெங்கும்
- ஒருவ ரேனும் உண்டோ? ஐயா!
- மூச்சை யடக்கி முக்குளி போட்டுக் (390)
- கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை
- வாரி யெடுத்து மேலே வந்திடும்
- முழுக்கா ளியிடனிடம் முத்தொன் றேனும்
- இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்!
- படிப்பிலார் தேடும் பற்பல பொருளும் (395)
- படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்;
- மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம்!
- ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை!
- ஐயா! ராஜி ஆவதே உத்தமம்!
- ஐயா! ராஜி ஆவதே உத்தமம்! (400)
(வரிகள்: 401-450)[தொகு]
- மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில்
- வீடுவீ டாயொரு கோடிருந் தாலும்
- வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?”
- என்(று)இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி
- இறங்கிப் போனார், இக்கதை யெல்லாம் (405)
- நாலாம் மனைவி நாடகக் காரியின்
- மாமன் மகன்ஒரு வக்கீல் குமஸ்தன்
- அறிந்து வந்தான், “அண்ணே! அந்த
- வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை,
- காடு கூப்பிடுது காலம் வரவில்லை; (410)
- வீடுபோக் கிடுது! வேளைவர வில்லை!
- கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில்
- என்ன அறிவான்? இவன்பேச் சையும்ஒரு
- காரிய மாகக் கருதிட லாமோ?
- செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில் (415)
- வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில்
- உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில்,
- வழக்குகள் நிதமும் வளர்ந்து வருவது
- சகஜம் என்று ஸ்தாபித் திடநான்
- ‘அத்தா ரிட்டிகள்’ ஆயிரம் காட்டுவேன். (420)
- அண்டப் புரட்டன் வக்கீல், என்ன
- ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ?
- இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்?
- ஏழை பாவம் யாவ ரேனும்
- வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார், (425)
- அன்றி,
- பதிவு சாட்சி பலவேசம் பிள்ளை
- கூட்டா ளிகளைக் கூட்டிற் கண்டால்
- வாயைத் திறவார், மௌனம் கொள்வார்!
- பேடியைக் கண்ட பீஷ்மரும் ஆவார்!
- அண்டமும் கோழி அண்ட மாய்விடும்,
- உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்,
- அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்
- எதுவந் தாலும் யானிருக் கின்றேன்!
- என்னை,
- அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
- இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
- மகம்மது லாவில் வரிகள் இத்தனை,
- என்று சொல்ல எனக்குத் தெரியும்!
- தி.பி. கோ.வைத் திருப்பித் திருப்பிப் (440)
- பாரா இரவும் பகலும் இல்லை,
- சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
- சட்ட மெனக்குத் தலைகீழாய்த் தெரியும்!
- நடைபடி யெல்லாம் நன்றாய்த் தெரியும்;
- இரண்டு கையால் எழுதத் தெரியும்; (445)
- அரைநிமி சத்தில் அநியா யங்கள்
- ஐம்பத்தைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்,
- பட்டிகை எழுதப் பாரம் போடக்
- கெட்டி கெட்டி என்ற பேர்கேட்ட
- ஏட்டுக் குமஸ்தன் யானே யாவேன். (450)
(வரிகள்: 451-500)[தொகு]
- சாடை காட்டிச் சாட்சி களுக்குத்
- தெரியாத காரியம் தெரியச் செய்ய
- என்னைப் போல்இங்கு யாருண்டு? ஐயா!
- கட்சிகள் வந்துஎன் கையில் தந்த
- பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி (455)
- வாங்கிப் பெட்டியில் வைத்துக் கொள்வேன்
- சிறிது மோசஞ் செய்திட மாட்டேன்,
- வக்கீல் குமஸ்தன் சத்திய வாசகன்,
- இன்னார் என்றுஇந் நாடெலாம் அறியும்!
- ராஜியும் வேண்டாம்! கீஜியும் வேண்டாம்! (460)
- நானே கேசு நடத்தி ஜயமும்
- வாங்கித் தருகிறேன், மலைக்க வேண்டாம்!
- என்
- வக்கீல் பேர்க்குஒரு வக்கா லத்தை
- எழுதிப் போடும்” என்றெலாம் சொல்லி (465)
- இந்திர சாலம் மந்திர சாலம்
- மகேந்திர சாலமும் வல்லஇம் மனிதன்
- நாட்பண மாக நாலு ரூபாயும்
- வக்கா லத்தும் வாங்கிச் சென்றான்;
- ‘அர்ஜி கொடுத்தேன், அவதி மாற்றினேன் (470)
- பிரதி யுத்தரமும் பேஷாய்க் கொடுத்தேன்,
- கேசில் ஜயமும் கிடைக்கும் நிச்சயம்’
- என்று வார்த்தைகள் இதமாய்க் கூறி,
- இடையிடை ரூபாய் இருபது முப்பது
- தட்டிக் கொள்வான்! (தலைவிதி! தலைவிதி!) (475)
- கொடுத்துவைத் தவர்கள் கொண்டுபோ னார்கள்
- என்விதி யானும் இப்படி யானேன்!
- நாகைக் கோர்ட்டில் கேசு நடந்தது;
- நடந்தது நடந்தது நாலரை வருசம்!
- ஐயோ! தெய்வமே! ஐயோ தெய்வமே! (480)
- இரவும் பகலும் இன்றிஎன் கணவர்
- பட்டபா டெலாம் பகர்வதும் எளிதோ?
- திங்கட் கிழமை தெரிசனம் போச்சு!
- திண்டாட் டங்கள் தீரா தாச்சு!
- வெள்ளிக் கிழமை விரதம் போச்சு!
- விவகா ரங்கள் மிகவே யாச்சு,
- குளியும் போச்சு, கும்பிடும் போச்சு
- கோர்ட்டு வாசல் குடியிருப் பாச்சு!
- மாதாந் தங்கள் மறந்தே போச்சு!
- வக்கீ லாபீஸ் வாழிடம் ஆச்சு! (490)
- உயர்ந்த மேடை உறைவிடம் போச்சு,
- ஒட்டுத் திண்ணை உறங்கிட மாச்சு,
- மெத்தை திண்டு விதானம் போச்சு,
- விரிக்கும் பாய்அவர் மேல்முண் டாச்சு!
- துப்பட் டாவும் தொங்கலும் போச்சு, (495)
- துவர்த்து முண்டும் துணியுமே யாச்சு!
- புட்டும் பழமும் காப்பியும் போச்சு,
- புளித்த காடியே போதுமென் றாச்சு!
- தோசை இட்டலி தோய்ப்பனும் போச்சு,
- தொந்தியும் கரைந்து சுருங்குவ தாச்சு! (500)
(வரிகள்: 501-510)[தொகு]
- சுகந்தத் தூளும் சோப்பும் போச்சு
- சும்மா சிரங்கு சொறிவது மாச்சு
- சீலைக் குடையும் செருப்பும் போச்சு
- தினமும் வெயிலில் திரிவது மாச்சு
- அரைவண் டியுமாடும் அனைத்தும் போச்சு! (505)
- அஞ்ச லோட்டம் அவர்க்கே யாச்சு
- மட்டிலாக் கவலை மனங்குடி கொண்டது,
- அளவிலாத் துன்பங்கள் அடிமை செய்தது!
- ஐயோ! யாங்கள் அனைவரும் அந்நாள்
- அடைந்த துயரெலாம் யாரே அறிவார்?
தாழிசை[தொகு]
- குலக்குறத்தி வரினுமொரு கோடங்கி வரினும்
- குறிகேட்டுப் பொருள்விரித்துக் கொண்டிருந்தோம் அம்மா!
- துலக்கமுறப் பரல்பரத்திச் சோசியர்கள் கணித்துச்
- சொன்னவைகள் உண்மையென்று துணிந்திருந்தோம், அம்மா! (01)
- பதியிருக்கும் பதியெங்கும் பதிவாகச் சென்று
- பால்வைத்துக் கணக்குகளும் பார்த்து வந்தோம் அம்மா!
- கதிகிடைக்கும் எனக்காளி கொடைநடக்கும் காலம்
- கடாத்தறித்துப் பொங்கலிட்டுக் காத்திருந்தோம் அம்மா! (02)
- குறத்திசொன்ன குறியெல்லாம் குறிதவறிப் போச்சே!
- கோடங்கி குறியாலும் குணமில்லா தாச்சே!
- நிறுத்துரைக்கும் நிமித்திகரின் நிமித்தங்கள் இந்நாள்
- நினைக்கும்போ துளம்வெந்து நீறாகு தம்மா! (03)
- பதித்தலத்துப் பால்வைத்தும் பயனடைந்தோ மில்லை!
- பலிகொடுத்தும் தேவிஅருள் பாலித்தா ளில்லை!
- விதித்தவிதி தான்இருக்க வேறுவிதி வருமோ?
- விம்மியினி அழுவதெலாம் வீணலவோ அம்மா! (04)
வேறு[தொகு]
- இப்பெருங் கஷ்டம் யாரே படுவர்?
- கணவர்,
- அல்லும் பகலும் அலைந்து சடைத்தார்,
- எலும்பும் தோலு மாக இளைத்தார்
- இருமல் இழுப்புக்கு இருப்பிட மானார்,
- எதிலும் விருப்ப மில்லா தானார்!
- வெளியூர்ப் போக்கை விட்டே விட்டார்,
- உள்ளூர் மட்டும் உலாவி வந்தார்,
- சிலநாள் பின்னும் செல்லச் செல்ல
- தெருவில் மாத்திரம் திரியவா ராயினர்! (10)
- படிப்படி யாய்இப் படியவர் பாடு
- குறைந்து குறைந்து கொண்டே வந்தது
- அண்டைவீ டாகி அறைப்புரை யாகி,
- படிப்புரை யாகிப் பாயிலும் ஆனார்!
- எழுந்து நடக்க இயலா தானார்,
- நடந்தவர் கீழே கிடந்தா ரம்மா! (15)