பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

31


பூங்காவும் வெட்டவெளியிலிட்ட கோலங்களினின்றும் வெளிவந்து விரிந்து பெருகிச் சுழன்றுகொண்டிருக்கின்றது.

வெட்ட வெளியில் கோலத்தை இட்ட சிற்பியைப்பற்றி இப்போது சிந்திக்கின்றோம். அப்பெருமகன் யார்? நமது திருவரங்கத்தில் தெண்ணீர்ப் பொன்னித் திரைக்கையால் அடி வருட, அரவு அணையில் பள்ளி கொண்டு உறங்குவான்போல் யோகம் புரிந்துகொண்டிருக்கும் மணிவண்ணன் அம்மான்தான். பாற்கடலைக் கடைந்தபோது ஒரு நீல மலையை மத்தாய்க் கொண்டு கடைந்தார், அந்தக் கருமணி. அந்த மத்தைப்போல் நீலமேனியையுடையவர் நம் திருவாழி அம்மான் (நீலத்திகிரி). ஆற்றிடைக்குறையில் அறிதுயிலில் இருக்கும் அப்பெருமான் தம் திருப்பாதங்கள் நோவ எழுந்து சென்று, பனைமட்டையைக் கையில் பற்றிக்கொண்டு. சுண்ணாம்பு நீரில் அதை அமுக்கி அமுக்கியா வெட்ட வெளியில் கோலத்தைப் போடுவார்? இல்லை இல்லை. “நியதிக் கோலத்தைப் போட வேண்டும்; அதற்கு அடங்கிப் பேரண்டங்கள் உருள வேண்டும்” என்று அறிதுயில் மாயோன் சங்கற்பித்தார். அவ்வளவுதான். உடனே, அவர் கையிலிருந்த அழகிய சக்கரம் (திருவாழியாழ் வான்) - கோலத்திகிரி - அவர்தம் திருக்கையை விட்டு அகன்று, பாய்ந்து, வெறும் பாழ்வெளியில் - பரவெளியில் - சுழன்று சுழன்று சென்று, ஒரு மாபெரும் கோலத்தை இட்டுவிட்டு, மீண்டும் அவர்தம் திருக்கரத்திலே வந்து அமர்ந்துகொண்டது.

மூலத்திகிரி இட்ட கோலத்திலே காலத்திகிரி பயபக்தியோடு உருண்டு சென்றது. காலத்திகிரியினின்றும் பிறந்து, அதோடு இணைந்து நிற்கும் ஞாலத்திகிரி, முதுநீர்த்திகிரி முதலிய திகிரிகளெல்லாம் நியதி தவறாமல் தொடர்ந்து சுழன்றன. இந்தத் திகிரித் தொடரைப் பார்த்து, கடிகாரத்தினுள்ளிருக்கும் சக்கரத் தொடரை அநுபவிப்பதுபோல, அநுபவிக்கின்றார், திவ்வியகவி. நாமும் அப்பாடலை மீண்டும் ஒருமுறை படித்து அநுபவிப்போம்.

“ஞாலத் திகிரி முதுநீர்த் திகிரி
        நடாத்தும் அந்தக்
காலத் திகிரி முதலான யாவும்
        கடல்க டைந்த