உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

லங்கைக்கு நான் 1951-ஆம் ஆண்டு முதல் முறையாகப் போன்போது பல இடங்களைப் பார்த்தேன். என்னுடைய அன்பர் ஸ்ரீ கே. கணேஷ் தம்முடைய காரை என்னுடைய பிரயாணத்துக்காகவே அளித்துத் தாமும் எனக்குத் துணையாக வந்தார். அவருடைய உதவி இல்லாமல் இருந்தால் 'நான் இலங்கை போனேன்; வந்தேன்' என்ற அளவில் தான் என் பிரயாணம் இருந்திருக்கும். மலைமேலும் பள்ளத்தாக்கிலும் சமவெளியிலும் கடற்கரையிலும் நூற்றுக்கணக்கான மைல்களைக் கடப்பதற்கு அவருடைய காரும் அன்பும் மிகமிகத் துணையாக இருந்தன.

இலங்கையிலே நான் பல இடங்களுக்குச் சென்றேன். பல காட்சிகளைக் கண்டேன். சில இடங்களில் என் கண்கள் இயற்கையழகை மொண்டு உண்டன. சில இடங்களில் என் நா இனிய விருந்தை நுகர்ந்தது. சில இடங்களில் என் செவிகள் பாராட்டுரைகளைக் கேட்டு இன்புற்றன. சில இடங்களில் நறுமண மலர்களை என் நாசி அநுபவித்தது. சில இடங்களில் அருவியையும் தென்றலையும் என் உடம்பு உணர்ந்து மகிழ்ந்தது. ஆனால் கதிர்காமத்திலோ என் உள்ளம் உணர்ச்சி மயமாயிற்று. செயலிழந்து நின்றேன். கூட்டத்திற் சென்று தலங்களை வழிபடுவதில் பல தொல்லைகள் உண்டென்று கருதுகிறவன் நான். என் விருப்பத்திற்கு ஏற்றபடி கதிர்காமத்துக்கு நான் சென்றபோது ஒரு விழாவும் நடைபெறவில்லை; கூட்டமே இல்லை. கண்ணுற் கண்டுகளிக்கும் ஆரவாரக் காட்சிகள் இல்லை. காதாற் கேட்டுவக்கும் முழக்கங்கள் இல்லை. ஆனாலும் கதிர்காமத்தலம் இருக்கத்தான் இருந்தது; மாணிக்க க்ங்கை ஒடிக்கொண்டுதான் இருந்தது; கதிர்காம வேலன் என்றும் உள்ளது போலவே இன்னவகை எனவரிய இரகசியப் பொருளாகவே இருந்தான்.

அமைதியான சூழ்நிலையில் மன அமைதியுடன் கதிர்காமத்தைத் தரிசிக்கும் இன்பம் கிடைத்தது. அத்தலத்தைப்பற்றிப் பலபல கதைகள் தமிழ் நாட்டில் வழங்குகின்றன. அவற்றையெல்லாம் கேட்ட போது எனக்கு இருந்த உணர்ச்சியைவிட, கதிர்காமம் போய், நான் கேட்ட அத்தனையும் வெறும் கட்டுக் கதைகள் என்று உணர்ந்த சமயத்தில் உண்டான உணர்ச்சி அதிகம்.

அற்புதங்கள் கடக்கும் இடங்கள் நாடிக் கூட்டம் கூட்டமாகப் போவது மனிதர்களுக்கு இயல்பாகி விட்டது. இந்த இயல்பை உணர்ந்த பலர் வேண்டு மென்றே சில இடங்களில் பெரிய அற்புதங்கள்