பதிப்புரை
இந்நூலில் இரண்டு பகுதிகள் அடங்கியுள்ளன. முதற்பகுதி சில பண்புகளையும் பொருள்களையும் அகர வரிசைப்படுத்தி ஒவ்வோர் எழுத்திற்கும் ஒரு பாட்டாக அமைக்கப் பெற்றது. இரண்டாம் பகுதியோ ஒளவைப் பெருமாட்டி திருவாக்கின் விளக்கமாகப் பிறந்தது.
ஆசிரியர் நாரா நாச்சியப்பன் அவர்களின் கவிதைகளைத் தமிழகம் நன்குஅறியும். எளிமையும் அழகும், புதுமையும், புலமையும் நிறைந்த அவருடைய கவிதைகளை விரும்பிப் படிக்கும் தமிழன்பர்கள் பலர். அவர் சிறுவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார். சிறுவர் மனப்பான்மை தெரிந்து அவர்கள் விரும்பக் கூடிய எளிய சொற்களை அமைத்து அவற்றிலே கவிதையுணர்வு பொருந்தச்சிறந்த கருத்துக்களை வழங்கும் திறமை மிக்கவர். கவிஞரின் இலக்கிய ஆக்கங்களைத் தொடர்ந்து தமிழ் உலகுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள் ஆகும். இக்குறிக்கோள் நிறைவெய்த தமிழ்ப் பெருமக்கள் நல்லாதரவு தரவேண்டுகின்றோம். சிறுவர், சிறுமியர்க்கு ஏற்றசிறந்த இந்நூலினை அவர்களிடையே பரப்ப ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
பதிப்பகத்தார்