சோம்பல் சுக வாழ்வும், அதன் மீது எழுந்த ஒரு வித அமைதியும், நிலவுகின்ற சிவபுரத்தில் பல ரகமான உணர்வின் அலைகளை எழுப்பி விடும் பாறாங்கல் போல் வந்து விழுந்தது அந்தச் செய்தி.
—இன்னொரு ‘கில்லன்’ கட்டுகிறார்கள்.
மூன்றாவது ‘கில்லன்’. இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டையும் விட ரொம்பப் பெரியது. வேகமாகக் கட்டப்படுகிறது. உற்பத்திப் பெருக்கைத் துரிதப்படுத்துவதற்காக…
‘இன்னொரு கில்லனா?’
‘ஆமா. இப்ப இருக்கிற ரெண்டையும் முழுங்கி ஏப்பம் போடக்கூடிய பகாசுரக் கில்லன்…’
‘இப்பவே ஊருக்குள்ளே இருக்க முடியலே, அதுவும் வந்தாச்சோ, அப்புறம் வேறே வினையே வேண்டாம்’.
‘சிமிண்டுப் புகை பூரா இங்கேதான் வந்து சாடும்…’
‘நாத்தம் வேறே!’
‘காத்து இந்தப் பக்கமா அடிக்கிற போது, ஊரெல்லாம் ஊத்தப் பொண நாத்தம் குடலைப் பிடுங்கும்...’
‘இப்போ எங்கே பார்த்தாலும் சிமிண்டுத் தூசி. கூரையிலே, தட்டட்டியிலே, வீட்டுச் கவர்களிலே, தரையிலே, எங்கே பாரு, அடை அடையாப் படிஞ்சு போய் கிடக்கு, எத்தனை தரம் பெருக்கினாலும், மறுபடியும் பெருக்கி அள்ளலாம். அவ்வளவு தூசி! ரொம்பப் பெரிய