அ.ச. ஞானசம்பந்தன் என்ற பெயர் தமிழிலக்கிய வரலாற்றில் என்றென்றும் நிலை பெற்றிருக்கக் கூடிய உன்னதமான பெயராகும். எண்ணற்ற இலக்கியங்களை ஆய்வு செய்திருக்கும் அப்பெருமகனாரை ஒளவை தி.க.சண்முகம் அறக்கட்டளையின் சார்பாகச் சொற்பொழிவு செய்வித்ததின் மூலம் நாடகத் தமிழுக்கும் - சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் அறக்கட்டளை அமைப்பாளர்கள்.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலன்ெறி வழக்கம்
என்ற தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து தமிழ்நாடக வரலாற்றைத் தொடங்கும் பேராசிரியர், அதற்கு உரைகண்டவர்கள் எங்கெல்லாம் - எப்படியெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக ஆதாரத்தோடு விளக்குகிறார். இப்படிச் சுட்டிக்காட்டும் நக்கீரத் துணிவு அ.ச.ஞா. வைத்தவிர வேறு யாருக்கு வரும் ?
சிலம்பின் நாடகக் கூறுகளை விரிவாக ஆராயும் அவர் திருக்குறள், பட்டினப்பாலை, சிந்தாமணி முதலானவற்றுள் நாடகம் பற்றி வரும் குறிப்புகளை மிகநுணுக்கமாக ஆய்ந்து கண்டு கூறியிருக்கிறார்.