பக்கம்:திருவாசகத்தேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 33

என்னும் அப்பரடிகள் திருப்பாடலை ஓர்க. மேலும் மானிடப் பிறவிக்கு மட்டுந்தான நினைக்கும் புலன் உண்டு; திறன் உண்டு. அப்பரடிகள்,

          முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்
                    இம்மூவுலகுக்(கு)
          அன்னையும் அந்தனு மாவாய் அழல்வனா
                    நீயலையோ
          உன்னை கினைந்தே கழியும்என் ஆவி.
                    கழிந்ததற்பின்
          என்னை மறக்கப் பெறாய் என் பிரான் உன்னை
                    வேண்டியதே !

என்று இரந்து வேண்டுகிறார். அதாவது நினைக்கும் தகுதியுடைய மானிடப் பிறப்பில் உள்ளவரை இறைவா, உன்னை நினைப்பேன்! ஒருகால் மானிடப் பிறவியை இழந்து நினைத்தற்கு வாய்ப்பில்லாத புழுப் பிறப்பை அடையின் இறைவா, நீ என்னை மறக்கக்கூடாது என்று வேண்டுவதறிக. ஆதலால் பிறப்பை அறிந்து ஆன்மா தகுதிப்பாடுறுதல் வரை சுற்றும் என்பதறிக.

இறைவனின் கருணையே உயிர்களின் பயணத் தொடக்கத்திற்குக் காரணம். பயணங்கள் நிகழ்வதற்கும் மாறுவதற்கும் முற்றுப்பெறுவதற்கும் ஆன்மாவின் வாழ் நிலையே காரணம். ஒரு ஆன்மா மானுட நிலையை எய்துதலே கூடப் பல பிறவிகளுக்குப் பிறகுதான்! பலப்பல இடர்ப்பாடுகளுக்கும் பிறகுதான்! மனிதன் மிருகமும் அல்லன்; தெய்வமும் அல்லன். மனிதன் மிருகத் தன்மையி லிருந்து விலகி, மானுடத் தகுதியைப் பெற்று மெய்ம்மை நிலையையும் தெய்வத் தன்மையையும் அடைதலே ஆன்மாவின் பயணக் குறிக்கோள்; பயன்! மாணிக்க வாசகரிடம் ஆன்ம வளர்ச்சிக்குரிய தகுதியின்மைகளுக்குக் கழிவிரக்கம் கொள்ளல், ஆராக் காதலுடன் உண்மையை