பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


6. கொள்ளேன் புரந்தரன் மால் அயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு
அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே
இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது
எங்கள் உத்தமனே 2

புரந்தரன்-இந்திரன். நள்ளேன்-நட்புக்கொள்ளேன். எள்ளேன்-இகழேன். உள்ளேன்-நினைக்கமாட்டேன்

‘இந்திரன் முதலியோர் பதங்களை வேண்டேன். அடியார்களுடன் சேர்ந்திருப்பதாயின் நரகத்திலும் இருப்பேன்’ என்கிறார்.

ஆன்மிகத்தில் முன்னேறுபவர்கள், தாம் செல்லும் வழியில் செல்பவர்களின் நட்பையே விரும்பவேண்டும் என்பதை மிகப் பழங்காலந்தொட்டே இந்நாட்டவர் அறிந்திருந்தனர். புத்ததேவன் ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்று சொல்வதும், 'நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும்' (திருவேகம்பமாலை-5) என்று பட்டினத்தார் சொல்வதும், 'துரும்பனேன் என்னினுங் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய்' (தாயு. சுகவாரி-7) என்று தாயுமானார் சொல்வதும் இக்கருத்தை வலியுறுத்தும்.

7. உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன்
என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊர் ஊர் திரிந்து எவரும்
தம் தம் மனத்தன பேச
எஞ்ஞான்றுகொல் சாவதுவே 3