உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பூ' என்னும் நாள் இதழின் அலுவலகம். அங்கே அடியெடுத்து வைத்த அம்பலத்தரசனை வெகு ஆவலோடு வரவேற்றவர்கள் இருவர். அவர்களில் முதல் நபர், 'பூ' ஆசிரியர் பூவேந்திரன். இரண்டாம் ஆள், பூமிநாதன். இருவருக்கும் ஒருசேர வணக்கம் செலுத்தியபின் ஆசனத்தில் அமர்ந்தான் அம்பல்த்தரசன். விடிந்ததும் வெளிப்படுத்த வேண்டிய 'பூ'வின் கலைப்பகுதியில் வாழ்வதற்கே என்ற நாடகத்தின் விமரிசனத்தையும் சூடுமாறாமல் சேர்த்துவிட விரும்பினார் ஆசிரியர். அவர் வசம், தான் எழுதிக் கொணர்ந்திருந்த நாடகக் கருத்துத் தாள்களைச் சேர்ப்பித்தான் அம்பலத்தரசன். தன் பக்கம் திரும்பிய அம்பலத்தரசனை ஆர்வத்தோடு நோக்கிய பூமிநாதன், தன் முகத்தை மஸ்லின் வேஷ்டி முனை கொண்டு துடைத்துக் கொண்டு, "உங்களுக்காக நான் ரொம்ப நேரம் காத்துக்கினு இருக்கேன், மிஸ்டர் அம்பலத்தரசன்" என்று தெரிவித்தான். தொடர்ந்து, "ஆமா, உங்கள் முகம் என்னவோ போலக் களைத்துச் சளைத்து இருக்கே, என்ன விசேஷம் ?" என்றும் கேட்டான். அம்பலத்தரசன் மெல்லிய சிரிப்பின் இழையை இழைய விட்டவனாக, "ஒன்றுமில்லையே நாடகம் பார்த்த அசதியாக இருக்கலாம். வேறு விசேஷம் எதுவும் இல்லை", என்று சொன்னான். வேட்டியின் கீழ்க்கரையை எடுத்து ஒரு முறை தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். "உங்கள் போர்ஷன் குறைவாக இருந்தாலும், ரொம்பவும் கச்சிதமாகச் செய்துவிட்டீங்க, பூமிநாதன்" என்று தன் பாராட்டுதலைத் தெரிவித்தான் அம்பலத்தரசன். -