உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

குயிற் பாட்டு

மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்
எய்தி யிருக்க மிடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன், 50
வாலிலடி பட்டு மனமகிழ்வேன்; 'மா' வென்றே
ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்;
காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்;
காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்; 60
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்,
தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ ?
தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ ? 65
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்;
ஆசைதான் வெட்கம் அறியுமோ? என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே. 70
            காதல், காதல், காதல்;
            காதல் போயிற் காதல் போயிற்,
            சாதல், சாதல், சாதல்
                               முதலியன (குயிலின் பாட்டு)
பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!