அலெக்சாந்தரும் அசோகரும் உலகப் பெருவீரர் என்று புகழ்பெற்றவர்கள். அலெக்சாந்தர் இறுதிவரை வாளையே நம்பி இருந்தவர். அசோகர் போர்வெறி கொண்டு பல போர்களில் வெற்றிமாலை சூடியவர்; இடையில் வாளை எறிந்துவிட்டு ஆன்ம வலிமையையே துணையாகக் கொண்டவர்.
மாவீரர் இருவரின் சுருக்கமான வரலாறுகளைக் கொண்டது இந்நூல். அன்பு, வீரம், ஒப்புரவு, ஒருமைப்பாடு முதலிய பண்புகளைப் பின்னணியாகக் கொண்டு இந்நூல் இனிய எளிய நடையில் இயற்றப்பட்டுள்ளது.
வருங்காலப் பெரியோர்களாகிய தற்கால இளைஞர்கள் ஆர்வத்துடன் கற்றுச் சிறந்த குடிமக்களாக வேண்டுமென்னும் நோக்கத்துடன் இந்நூலை வெளியிடுகின்றோம்.
இதனைச் சிறந்த முறையில் இயற்றியுதவிய ஆசிரியர் திரு. ப. இராமசாமி அவர்களுக்கும், இந்நூல் அச்சாகும் காலத்து உடனிருந்து செம்மையாகத் திருத்தியுதவிய புலவர் திரு. தணிகை உலகநாதன் அவர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
கல்வி யுலகம் இதனை ஏற்று ஆதரிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.