40 ✲ உத்தரகாண்டம்
யார் மீதோ கோபம் பொங்குகிறது. யார் மீது? யார் மீது?
பறட்டுப் பறட்டென்று பெருக்குகிறாள்.
“அம்மா?...”
ரங்கன்தான்.
“ஏம்ப்பா, வைக்கோல் பிரிக்காரன் வந்திருக்கானா?”
“இல்லம்மா. சாயபு மவுத்தாயிட்டாராம்.”
அவள் துடைப்பத்தைக் கீழே போடுகிறாள்.
“யாரு... தியாகி சாயபுவா? ஒரு மாசம் முன்ன சைக்கில் ரிக்சாவில் ஏறிட்டு வந்தாங்க. அய்யாவின் நினைவு நாள்னு...”
“என்னமோ நெஞ்சு வலிக்கிதுன்னாப்புல. ஒருநா சங்கரி நர்சிங் ஹோம்ல வச்சிருந்தாங்களாம். அங்கியே ரா போயிட்டாராம். இத, ரமணி வந்திருக்கு...”
அந்தக் காலத்து மனிசன், ஒரே மனிசன்... போயிட்டீங்களா? என்று மனம் குன்றுகிறது.
இந்த ரமணி பால் பாக்கெட் போடுவான். அப்படியே படித்துக் கொண்டிருந்தான்.
“ஏம்ப்பா ? எந்த வீட்டில இருக்காங்க ? மகன் வீட்லதானா?”
“மெயின் ரோடுக்கப்பால, பேரன் சித்திக் வூட்டிலதான் வச்சிருக்காங்க. அவுருதா உங்ககிட்ட சொல்லிட்டுவரச் சொன்னாங்க...”
“ஓ, மருந்துக்கடை வச்சிருக்கான்னு சொன்னாங்க. ஜமிலா புள்ள.”
“ஆமா. அந்த மருந்துக்கடையிலதா நா வேலை செய்யிறேன்...”
“ஓ...” அவள் பேசாமல் அவனைப் பின் தொடர்கிறாள்.
இவள் அந்த ‘மெயின் ரோடை’த் தாண்டிப் போய் வெகுநாட்களாகிவிட்டன. பழைய சாலையா அது? அது