52
த. கோவேந்தன்
இச்செய்தி மாபாரதத்தில் வில்லிபுத்துசாழ்வார் கூறியது.
கண்ணனைக் கட்டியதுபோல், இராமனையும் கட்டி ரசிக்க வேண்டும் என்று பெரியாழ்வார் விரும்பினார். கண்ணன் சகாதேவன் மனத்தால் கட்டுண்டான். இராமனைப் பெரியாழ்வார் மல்லிகை மா மாலை கொண்டு, கட்டுவித்தார்.
திருமணம் ஆன புதிது. சீதையும் இராமனும் நூல் நடுவே நுழையினும் பொறுத்துக் கொள்ள இயலாத அன்றில்கள் போல் இணை பிரியாமல் நெருங்கி காதல் களியில் ஈடுபட்டனர்.
வேடிக்கைப் பேச்சுக்களும் வினோதக் கதைகளும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
"என்னிடம் இவ்வளவு நெருங்கிப் பழகுகின்றாயே! ஏதாவது காரணத்தால் நான் பிரிந்து செல்ல நேர்ந்தால் என்ன செய்வாய்!" என்று கேட்டான் இராமன்.
"என்ன செய்வேனா? பிரியவே முடியாதபடி கட்டிப் போட்டு விடுவேன்!" என்றாள் சீதை!
"என்னைக் கட்ட உன்னால் முடியுமா?" இராமன்.
"இதோ கட்டிக்காட்டுகின்றேன்" என்று கூறிக் கொண்டே சீதை, தன் கூந்தலில் சுற்றியிருந்த மல்லிகை மாலையை அவிழ்த்து, அதைக் கொண்டு அருகிலிருந்த சண்பகக் கொடியில் கட்டி விட்டாள்.
மல்லிகைக் கொடி தானே! இராமன் எளிதில் அறுத்துவிட மாட்டானா என்று நமக்குத் தோன்றும்.
அது வெற்று மல்லிகைக் கொடியா?
கண்ணனைக் கட்டிய சகாதேவன் மனத்தன்பைவிடப் பலமடங்கு அன்பு அம்மல்லிகை மாலையில் பிணைந்துள்ளதே! மல்லிகை மாலையை அறுக்கலாம். அதில் பிணைந்துள்ள காதலன்பை இராமனால் அறுக்க இயலுமா?