பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

உண்மையான இன்பம் உழைப்பில்தான் இருக்கிறது. உற்சாகமான உழைப்பினால் கிடைக்கின்ற பலனில்தான், நல்ல நிம்மதியும் கிடைக்கிறது. அந்த இன்பமும் மகிழ்ச்சியுமே நீடித்து நிலைத்து நிற்கும். அதுவே வாழ்வின் பயனுமாகும்.

‘எந்த வழியிலேனும் பணம் சேர்த்து விடலாம், இஷ்டம் போல் வாழலாம்’ என்று ஒருசிலர் முயற்சி செய்கிறார்கள். அது முறையான வாழ்க்கையல்ல, குறுக்கு வழி எப்பொழுதும் துன்பத்தையே தரும்.

துன்பம் தரும் வழியை தெரிந்தே தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வது, அறிவுடையோர்க்கு அழகல்ல. நல்ல வாழ்க்கை வாழ்பவரையே உலகம் மதிக்கிறது. போற்றுகிறது, புகழ்கிறது. அதனால்தான் வள்ளுவரும் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக!’ என்றார்.

நாம் புகழுடனும் நிம்மதியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்திட விரும்பினால், நல்ல பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டும். வேறுபாதை வேண்டாம் அவ்வாறு சென்றால் என்ன ஆகும் என்ற ஓர் கேள்விக்குப் பதிலாக, இந்த குறுநாவல் அமைந்திருக்கிறது.

மாணவர்கள், சிறுவர் சிறுமிகளுக்காக அமரர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்களால் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை, எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் அளிக்கிறோம்.

கடின உழைப்பையும், திடமான மனதையும், நல்ல கொள்கைகளில் நம்பிக்கை வைத்து நடப்பவர்களையும் கடவுள் கைவிடமாட்டார் என்ற பெரியோர்கள் பொன் மொழியை உங்களிடம் இந்நூலில் நினைவுபடுத்தி இருக்கிறார். டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா.

சென்னை - 600 017.

பதிப்பாளர்