பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதற்பாலாக விளங்கும் அறத்துப்பால் முழுவதிலும் தனி மனித வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றார். ஏன்? பாயிரத்திலே தனிமனிதனை உருவாக்கும் முயற்சியில் திருவள்ளுவர் ஈடுபடுகின்றார்.

காலம் மனிதனின் சிறந்த கருவி. அதை உணர்ந்து பயன்படுத்துகிறவன் வளர்கிறான்; முன்னேறுகிறான். மனிதன் பெறக்கூடிய அறிவு, செல்வம், புகழ் ஆகிய பேறுகள் அனைத்தையும் காலம் என்ற கருவியின் மூலமே மனிதன் அடைகின்றான். ஆதலால் காலத்தே செய்யவேண்டு மென்பது வள்ளுவர் நெறி. செல்வத்தை இழந்தால் திரும்ப ஈட்டலாம். இழந்த புகழையும்கூட திரும்பப் பெறலாம். ஆயினும், இழந்த காலத்தைத் திரும்ப அடைதல் - அல்லது பெறுதல் சாத்தியமில்லை. காலம் விலைமதிப்பற்றது. அதனாலன்றோ பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று அப்பரடிகள் கூறியுள்ளார். ஒரு சோஷலிச சமுதாயத்தினுடைய அமைப்பின் அடித்தளம் உழைப்பேயாகும். உழைப்பு உருப்பெறுவது காலம் என்னும் அடிப்படையிலேயே. அதனால்தான் திருவள்ளுவர்,

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்”

–குறள் 38

என்கிறார்.

காலத்தை வீழ்நாள் என்று குறிப்பிடுவது அறிவியலின் பாற்பட்ட கருத்து. மனிதன் வேறு எதை நிறுத்தினாலும் நிறுத்தி வைக்க முடியும். ஆனால் காலத்தை வராமலோ போகாமலோ நிறுத்தி வைக்கமுடியாது. இயல்பாக நம்முன் வேலைக்கென்று-கடமைகளுக்கென்று வீழ்கின்ற நாட்கள் என்று பொருள்படும். பிறிதொரு வழியிலும் பொருள் கொள்ளலாம். நன்றாற்றின் நாள் வீழாமல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்.