பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

121



சங்ககாலக் கவிஞர் பக்குடுக்கை நன்கணியார் “ஒரு வீட்டில் சாப்பறை கேட்கிறது; பிறிதொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கிறது! ஏன் இந்த முரண்பாடு?” என்று கேட்கிறார். அருகிலிருந்த ஒருவன் “இந்த முரண்பாடு படைப்பாளனின் செயல்” என்கிறான்.

உடனே கவிஞருக்குக் கோபம் மேலிடுகிறது. “அவலமும் அழுகையும் ஒரு வீட்டில்; களிப்பும் மகிழ்ச்சியும் பிறிதொரு வீட்டில் என்று எண்ணிப் படைத்திருப்பானாயின் அப் படைப்பாளன் பண்பில்லாதவன்” என்று ஏசுகிறார்.

இது மட்டுமா? “இந்த உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால், மானிடம் இந்த இன்னாத உலகத்தை இனியன பொதுளுவதாக மாற்றி அமைக்க வெண்டும்” என்று பாடுகிறார்.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்!
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே!

(புறம் 194)

என்பது அந்தப் பாடல். கச்சியப்பரும் “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்பார்.

அப்பரடிகள், நீதியை ஏற்போர் இந்த உலகத்தில் குறைவு என்று கூறுகின்றார். நீதிநெறி நிற்க விரும்பாதார் நீதி சொல்பவரைப் பார்த்து, “நீதிதான் சொல நீ எனக்கு யார்?” என்று கேட்பர். இதிலிருந்து புலப்படும் உண்மை, உறவினர்களே நீதி சொல்லும் இயல்பினர் - உரிமையுடையவர் என்பதாகும்.