பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18. நல்ல மரமும் நச்சு மரமும்

ஒரு நாள் ஒர் அரசிளங் குமரன் தன் தோழனைத் துணைக்கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென்றான். அங்கு, அவன் விரும்பியவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால் எங்கும் அலைத்து திரிந்து அலக்கணுற்றான். பசியால் மெலிந்து, வெயிலால் உலர்ந்து, இருவரும் தளர்ந்து சோர்த்தார்கள்; அப்போது, நெடுத் தூரத்தில் ஒரு சிற்றூர் தோன்றக் கண்டு, அவ்வூரை நோக்கி மெல்ல நடந்து செல்வாராயினர். கதிரவன் வெம்மையால் அரசிளங் குமரன் தலைநோயுற்றுத் தன் தோழனது தோளைப் பற்றிக்கொண்டு வழி நடந்தான். அவ்வூரின் அருகே வந்தபோது, இருவரும் மெய் சோர்ந்து, நாவறண்டு, அடிவைத்து நடப்பதற்கும் வலியற்றவராயினர். அந் நிலையில், இருவரையும் இன்முகங்கொண்டு எதிர் சென்று அழைப்பதுபோல் இளந்தென்றல் எழுத்து வந்தது. அம் மெல்லிய பூங்காற்றின் இனிமையால் புத்துயிர் பெற்ற நண்பர்கள், அகமும் முகமும் மலர்ந்து தென்றல் எழுந்து வந்த திசை நோக்கிச் சென்றார்கள். அவ்வழியில், இளந்திரைகளோடு இலங்கிய நன்னீர்ப் பொய்கையொன்று அமைந்திருந்தது. அப்பொய்கையில் விளங்கிய செந்தாமரையில் அன்னங்கள் அமர்ந்து துயின்ற அழகு கண்ணைக் கவர்ந்தது. நற்றாமரைக்கயத்தில் துயின்ற நல்லன்னத்தைக் கண்ட இளவரசன் துணைவனை நோக்கி,