பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

V. அறிவும் திருவும்

21. காயும் கனியும்

மலை வளமுடைய தமிழ்நாட்டில் முற்காலத்தில் அருந்தவம் முயன்ற முனிவர்கள் காய்கனிகளையே அருந்தி வந்தார்கள். நாவிற்கினிய நற்கனிகளும் காய்களும் தமிழ் நாட்டு மலைகளில் நிறைந்திருந்தமையால் ஆன்றோர் பலர் அங்கு வாழ்ந்து அருந்தவம் புரிவாராயினர். தமிழ் முனிவன் வாழும் பொதிய மலையில் பன்னிராண்டு, முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்தார். நெடுந்தவம் முடிந்த நிலையில் பசியின் கொடுமை யறிந்த முனிவர், அம்மலையிலிருந்த ஒரு நாவல் மரத்தின் நற்கனியைக் கொய்து, அதைத் தேக்கிலையிற் பொதிந்து, அருகேயிருந்த ஆற்றை நோக்கிச் சென்றார். பன்னிராண்டுக்கு ஒருமுறை பழுக்கும் பெருமை வாய்ந்த அக்கனியை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு நீராடப் போந்தார் முனிவர். அப்பொழுது அவ்வழியாகத் தன் காதலனுடன் களித்து விளையாடி வந்த ஒரு சிறுமி அக்