பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

27

பயிர்த்தொழிலைக் குறிக்கும் மற்றொரு சொல் வேளாண்மை. பயிர்த்தொழில் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அவ்வளவு பழமை வாய்ந்தது. வேளாண்மை என்ற சொல்லும். வேளாண்மை செய்பவர் வேளாளர். இந் நாட்டிலே, அன்றும் இன்றும் வேளாளருக்குத் தனிச் சிறப்புண்டு. வேளாளர், தம் நிலத்தைப் பண்படுத்தியவாறு மனத்தையும் பண்படுத்தினார்கள்; தம் உழைப்பால் வந்த உணவுப் பொருள்களைத் தங்கு தடையின்றி எல்லோருக்கும் தந்தார்கள்; அற்றாரையும் அலந்தாரையும் ஆதரித்தார்கள்; பசித்தோர்முகம் பார்த்துப் பரிவு கூர்ந்தார்கள்; வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து, அவர் திருந்திய முகம் கண்டு மகிழ்ந்தார்கள். அதனால் வேளாண்மை என்ற சொல்லுக்கே உபகாரம் என்னும் பொருள் வந்தது. திருக்குறளிலே அப் பொருளைக் காணலாம்.

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”

என்று திருக்குறள் பாடிற்று. இக்குறளில் வேளாண்மை என்ற சொல்லுக்குப் பரோபகாரம் என்பது பொருள். திருவள்ளுவர் காலத்திலேயே வேளாண்மை என்ற சொல் பரோபகாரம் என்னும் பொருளில் வழங்கியிருக்குமானால் அதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்னமே வேளாளரிடம் அப்பண்பாடு தோன்றி வளர்ந்து சிறப்பாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரத்தக்கது. “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று பழைய நீதி நூல் பாடியதும் இக் கருத்துப் பற்றி யன்றோ? திருஞானசம்பந்தரும் வேளாளருடைய பண்புகளைத் தேவாரத் திருப்பாட்டிலே கூறுகின்றார்: