பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ் இன்பம்


இலக்கியத்தில் வழங்கும் காவணம் என்ற அருஞ்சொல் செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது.

இனி, தொண்டு என்ற தொன்மையான சொல்லைப் பார்ப்போம்; தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை தேசத் தொண்டு எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை திருத்தொண்டு எனப்படும். 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே' என்னும் வாய்மொழி பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல்.

'பையச் சென்றால் வையந் தாங்கும்' என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி. பைய என்றால் மெல்ல என்பது பொருள். 'பையப் போ' என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது. தேவாரத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞான சம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே” எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும். இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை.

அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல்.[1]இக்காலத்தில் 'பசார்' என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும்


  1. தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவரி வயிற்றுச் செல்வோரை அது குறிக்கிறது.