பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35. முழக்கம்


மிகப் பரவலான சர்குலேஷனைக் கொண்ட வணிகப் பத்திரிகைகள், தங்கள் வாசகர்களை கவர்ச்சிப்பதற்காக, தரக்குறைவான— பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சிதைத்துச் சீரழிக்கக் கூடிய— விஷயங்களையும் சித்திரங்களையும் உற்சாகமாக வெளியிடுவதை ஒரு வியாபார உத்தியாகக் கையாண்டு வருகின்றன. பலப்பல வருடங்களாகவே.

இலக்கிய வளர்ச்சியையும் சிந்தனை விழிப்பையும் நோக்கமாகக் கொண்ட சிறு பத்திரிகைகள், பெரிய பத்திரிகைகளின் இந்தப் போக்கைச் சுட்டிக்காட்டி, சூடாக விமர்சித்தும் கண்டித்தும் கருத்துப் பிரச்சாரம் செய்யத் தவறியதில்லை. தாமரை, உதயம் போன்ற ஏடுகள் இப்பணியைத் தீவிரமாகவே செய்திருக்கின்றன.

இந்த எதிர்ப்புக் குரலை முதலாவது இதழிலேயே வீரமுழக்கம் செய்து கொண்டு மற்றொரு தரமான இலக்கியப் பத்திரிகை தோன்றியது 1980 ஜனவரியில்.

அதன் பெயரே 'முழக்கம்'தான்.

பூம்புகார்—மேலையூர் (சீர்காழி வட்டம் ) என்ற இடத்திலிருந்து வெளிவந்த முழக்கம் காலாண்டு ஏடு ஆகும்.

'புது இதழ்கள் தமிழில் நிறையவே வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றின் குறிக்கோள் பணம்.

பரபரப்பான ரசனை, பயனில்லாத பொழுதுபோக்கு இவற்றுக்காகத் தமிழ் மக்கள் நிரம்பவே செலவழிப்பார்கள் என்பதையுணர்ந்து அவை இயங்குகின்றன.

பெண்களைத் தூரிகையால் துகிலுரிகின்ற ஓவியத் துச்சாதனர்களும் வக்கிரத்தையே மையாக்கி எழுதும் எழுத்து வணிகர்களும் விலங்குகளின் நிலைக்குத் தமிழ் வாசகர்களை அழைத்துச் செல்லும் கொடுமை நிகழ்கிறது.

ஆபாசங்களையே அழகுகளாகவும், வக்கிரங்களையே மேன்மைகளாகவும் ஏற்றுக் கொள்கிற அளவு பல வாசகர்கள் மந்தப்பட்டுப் போய் விட்டனர்.