பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


பகச்சொல்வது கேளிரையும் பிரிக்கும் என்று இக்குறள் கூறுவதால் நகச்சொல்வது பகைவரையும் நட்பாக்கும் என்பது கூறாமலேயே விளங்கும்.

நகச்சொல்லும் பண்புடையாளர் பகச்சொல்லத் தெரியாதவர். பகச்சொல்லும் பழக்கம் உடையவர் நகச்சொல்லத் தெரியாதவர். ஆகவே இக்குறள் இந்தத் தெரியாதவரையும் தெளியாதவரையும், அவரது சொல்லோடும், செயலோடும், விளைவோடும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

புறத்தில் துாற்றுவர் என்பதால், “நேரிற் புகழ்வர்” என்றாகிறது. இதனை வள்ளுவர் மற்றொரு குறளில் “புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல்” என்கிறார். அத்தகைய மக்கள் வாழ்வதைவிட மடிவது நல்லது என்பதும் அவரது கருத்து.

“புறங்கூறுதல் என்பது மக்கட்கு வேண்டாத ஒன்று. புறங்கூறி வாழ்கின்ற வாழ்வு நல்வாழ்வு ஆகாது. அதன் விளைவு மிகக் கொடியது! அதனைச் செய்பவர் தெளிவற்றவர்! அதிலும் நல்லவைகளைக் கூறி நட்புக் கொள்ளத் தெரியாதவர்” என்பதே இக்குறளின் முடிவு.

படியுங்கள் குறளை மறுபடியும்...

       "பகச்சொல்லி கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
        நட்பாடல் தேற்றா தவர்."

எப்படி இக் குறள்? இந்த குறளே நமக்கு இவ்வளவு அறிவுரைகளை வழங்குமானால், மற்ற ஆயிரத்து முன்னுாற்று இருபத்தொன்பது குறள்களும் எவ்வளவு அறிவுரைகளை வழங்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.