152
"பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னன் பல்லவர்கோன் பணிந்த
-- தில்லைத் திருச்சித்திரகூடம்" (பெ.தி. 3-2-3)
என்று பாடுகின்றார். இதனால் பல்லவ வேந்தனொருவனால் ஆதியில் அபிமானிக்கப்பட்டது இத்திருமால்கோயில் என்பது தெரியவரும்.
"பல்லவ மல்லையர் கோன்பணிந்த பரமேச்சுர விண்ணகரம்",
"நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம்" (பெ.தி' 5-19-7) கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்”
எனப் பண்டையரசர்கள் திருப்பணிசெய்து வணங்கிய தலங்களை இவ்வாறே ஆழ்வார்கள் பாடியிருத்தல் காணலாம்.
'பணிந்த கோயில்' முதலியன, பணிசெய்து, பிரதிஷ்டித்த கோயில் என்ற பொருளில் முன்பு வழங்கியவை என்பது; மேற் காட்டிய ஆழ்வார்கள் வாக்குகளினின்றும் அறியப்படும்.
பல்லவர்கோனால் பணிசெய்து வழிபடப்பட்டது இத்திருச் சித்திரகூடம் என்று கருதுதல் பொருந்தும். இங்கனம் பணிந்த பல்லவனாகத் திருமங்கையாழ்வாராற் புகழப்பட்டவன் அவர் காலத்தே பரம வைஷ்ணவனாக விளங்கிய இரண்டாம் நந்தி வர்மனாகச் சொல்லலாம்.
இச் சித்திரகூடத் திருமாலை முற்காலத்தில் முறைப்படி ஆராதித்து வந்தவர்கள் தில்லை மூவாயிரவரேயாவர்.
"மூவாயிரநான் மறையாளர் முறையால் வணங்க
--தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரகூடம்"
"தில்லைநகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான்"