பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85



“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு--படியின் மிசைப்
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை"

எனவரும்

வெண்பாவினைப்பெற்று அவனுக்கு சாதிவேறு பாடறத் தீக்கை செய்து வீடுபேற்று நிலையை வழங்கியவர்; தில்லைத் திருவிழாவில் கொடியேறத் தடை யேற்பட்டபொழுது, கொடிக்கவி பாடி, கொடிதானே ஏறும்படி செய்து சித்தாந்தச் செந்நெறியைப் பரப்பியவர்.

அருணகிரி நாதர்: முருகப்பெருமானது திருவருளைப் பெற்ற அருணகிரிநாதர், தில்லை எழுநிலைக் கோபுரங்களிலும் தில்லை யம்பலத்தின்கண்ணும் எழுந்தருளிய முருகப்பெருமானைத் திருப்புகழ்ப் பனுவல்களாற்பாடிப் போற்றியுள்ளார்.

இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் முதுசூரியர் எனப்படும் இரட்டைப்புலவர்கள் தில்லைக்கலம்பகம் பாடிக் கூத்தப்பெருமானது திருவருளைப் பெற்றுள்ளார்கள்.

குருஞான சம்பந்தர்: தருமபுர ஆதீனத்தின் முதற் குரவராகிய குருஞான சம்பந்தர், தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டு ஆயிரக்கால் மண்டபத்தில் இரவில் நிட்டை கூடியிருந்த பொழுது, சிவகாமியம்மையார். வெள்ளிக்கிண்ணத்தில் பாயசத்தையும் பொற்கிண்ணத்தில் திருவமுதையும் பருகும் நீரையும் கொணர்ந்து, நள்ளிரவில் அவர்தம் பசியை நீக்கியருளினார். கூத்தப் பெருமான் அருள்பெற்ற குருஞானசம்பந்தர் சிவபோக சாரம் முதலிய எட்டு நூல்களை இயற்றியுள்ளார்.

கண்கட்டி மறைஞான சம்பந்தர்: சிதம்பரத்தில் குகைமடம் என்னும் ஒரு மடத்தை நிறுவி அம்மடத்திற்றங்கியிருந்து, சிவ தரு மோத்தரம், சைவசமய நெறி முதலிய பல நூல்களையியற்றிக் கூத்தப்பெருமான் திருவருளைப் பெற்றவர்.