பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263



பள்ளிவாசலும், பெருமானார் அவர்கள் இருக்கும் இடமும் ஒன்று சேர்ந்து இருந்ததால், பெருமானார் அவர்கள், திரையை விலகிப் பார்த்தார்கள். அங்கே மக்கள் காலைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்ததும் பெருமானார் அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகி, புன்முறுவல் செய்தார்கள்.

அப்போது, பெருமானார் அவர்கள் பள்ளிவாசலுக்கு வரப் போவதாக எண்ணி, தொழுது கொண்டிருந்த மக்கள் தங்கள் இடத்திலிருந்து விலகிச் செல்ல நினைத்தார்கள். தொழுகையை நடத்திக் கொண்டிருந்த அபூபக்கர் அவர்களும் பின்னடையக் கருதினார்கள். பெருமானார் அவர்கள் சமிக்ஞையினால் அவர்களைத் தடுத்து, திரையைப் போட்டுக் கொண்டார்கள்.

அன்று பகலில், பெருமானார் அவர்களுக்கு மயக்கம் உண்டாவதும், பிறகு தெளிவதுமாக இருந்தது.

அடிக்கடி திருக்குர்ஆன் வசனங்களைப் பெருமானார் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகல், அபூபக்கர் அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் பெருமானார் அவர்களைக் காண வந்தார். அவர் கையில் பல் விளக்கும் குச்சி ஒன்று இருந்தது. பெருமானார் அவர்கள் அதைக் கூர்ந்து பார்த்தார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்து, அவர்கள் பல் விளக்க விரும்புவதாகத் தெரிந்தது. உடனே ஆயிஷா நாச்சியார் அவர்கள், தம் சகோதரரிடமிருந்து அக்குச்சியை வாங்கி, அதன் நுனியை மெதுவாக்கிப் பெருமானார் அவர்களிடம் கொடுத்தார்கள். பெருமானார் அவர்கள் அதைக் கொண்டு பல் விளக்கினார்கள். அப்பொழுது பிற்பகல் நேரம். “தொழுகையை ஒழுங்காக நடத்த வேண்டியது. பெண்களிடம்- அடிமைகளிடம் கருணையோடு இருக்க வேண்டும்” என்ற சொற்கள் அவர்களின் வாயிலிருந்து வெளி வந்தன.

அவர்கள் அருகில் தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் அடிக்கடி கையை இட்டு, முகத்தில் தடவிக் கொண்டிருந்தார்கள். பிறகு கைகளை உயர்த்தி, “ஆண்டவனே மேலான தோழன்!” என மூன்று