பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


காசியை அழைத்தவருக்கு 'கா'வுக்கு மேல் ஓர் எழுத்துக் கூட வெளிக்கிளம்பக் காணோம். வேர்த்துக் கொட்டியது. உலகமே அஸ்தமித்துவிட்ட பாங்கில் கண்களை மூடிக்கொண்டாரா ? இல்லை. கண்கள்தாம் தாமே அப்படி மூடிக் கொண்டன. 'ஆறுமுகப் பெருமானே!'-நெஞ்சம் நெக்குருகியது. 'கருணைகூர் முகங்கள் ஆறும்' மன அரங்கில் தோன்றின. அவரையும் அறியாமல் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.

செந்தில் நாயகம் சிறுகச் சிறுகச் சுயஞாபகம் பெற்றார். அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்திருக்க வேண்டும் அத் தெய்வம்!

மருந்து குடலுக்குச் சென்றது.

காசி நின்றான்.

மின் விசிறி ஓடிற்று.

இரவுச் சமையலுக்கு விவரம் கேட்டான் காசி. அவன் தான் இப்போதைக்குத் துணை. கண்பார்த்த துணை. சுரத்து வடிந்த தொனியில் அவர் ஏதோ சொன்னார்.

"அம்மா வந்தாத்தான் இனிமே உங்களுக்குத் தெம்பு வருமுங்க!...” என்று உண்மையை அனுபவபூர்வமான பிடிப்புடன் வெளியிட்டான்.

"ஊம்!" கொட்டினார். வெண் பற்கள் லேசாக ஒளி காட்டின. ஜீவன் இழந்த சிரிப்புத்தான் தெரிந்தது. டெலிபோன் மணி 'கண கண' வென்று ஒசைப்படுத்தியது. மகேந்திரனாக இருக்குமோ என்ற சபலம். ஆவலுடன் ரீலிஸ்வரைக் கையிலெடுத்தார். மகேந்திரன் இல்லை!...