பக்கம்:பறவை தந்த பரிசு-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27


தெய்வத்துக்குப் படைத்துவிட்டு அந்தப் பொங்கலை உன்னைப் போல் சின்னப் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன்"’ என்றாள் அந்த அம்மா.

"அம்மா நீங்கள் நல்ல அம்மாவாகஇருக்கிறீர்கள். எனக்கும் என் பச்சைக்கிளிக்கும் பொங்கல் தருவீர்களா?" என்று கேட்டாள் முத்துமணி.

"கொஞ்சம் இரு, தெய்வத்துக்குப் படைத்து விட்டுத் தருகிறேன்" என்றாள் அந்த அம்மா.

தெய்வத்துக்குப் படைத்து முடிந்ததும் அந்த அம்மா முத்துமணிக்கும் பச்சைக்கிளிக்கும் இரண்டு இலைகளில் பொங்கல் வைத்துக் கொடுத்தாள். முத்துமணி அந்தப் பொங்கலை வாங்கித் தின்றதும், "அம்மா, உங்கள் பொங்கல் மிக அருமையாக இருக்கிறது. என் அம்மாவைத் தேடிக் கண்டுபிடித்ததும், இதுபோல் பொங்கல்வைத்துத் தரச்சொல்லுவேன்!’’ என்றாள்.

"குழந்தாய், உன்னைத் தேட வைத்து விட்டு உன் அம்மா எங்கே போய்விட்டாள்?" என்று அந்த அம்மா கேட்டாள்.

"அம்மா, என்னைப் பெற்ற அம்மா என்னைத் தவிட்டுக்கு விற்றுவிட்டாள். நான் அவளைத் தேடிக் கொண்டு திரிகிறேன். உங்களுக்கு என் அம்மாவைத் தெரியுமா? எனக்கு காட்டுகிறீர்களா!" என்று கேட்டாள் முத்துமணி.