பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

கைகளைத் தலைக்குமேல் உயர்த்தித் தவம் செய்கிற உருவம் அர்ச்சுனன் என்றும், அதற்கு எதிரில் நான்கு கைகளுடன் நிற்கும் தெய்வம் சிவபெருமான் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் சொல்வதை ஒப்புக் கொண்டால், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற மற்ற உருவங்கள் எதைக் குறிக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற நாககுமாரர்கள், தெய்வகணங்கள், யானைகள், கங்கை ஆறு, கோயில், தலையற்ற மூன்று உருவங்கள், மற்றும் பல மனித உருவங்கள் இவை எல்லாம் ஏன் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன? மேலும், தபசுசெய்கிற அர்ச்சுனனிடத்திற்குச் சிவபெருமான், வேடன் உருவங்கொண்டு போனார் என்றும் உமையம்மையார் வேடுவச்சி உருவம் எடுத்து உடன் சென்றார் என்றும் புராணம் கூறுகிறது. வேடன் வேடுவச்சி உருவங்கள் இதில் காணப்படவல்லை. ஆனால், கதைக்குத் தொடர்பு இல்லாத அநாவசியமான உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அன்றியும் இந்தியச் சிற்ப முறைப்படி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைத் தலைவர்களான அர்ச்சுனனையும் சிவபெருமானையும் பெரிய உருவமாக அமைத்து, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத மற்ற உருவங்களைச் சிறிய உருவமாக அமைத்திருக்க வேண்டும். இந்தச் சிற்பத்தில் அப்படி அமைக்கப்படவில்லை. நாகர்கள், தெய்வ கணங்கள், யானை கோயில் தலையற்ற உருவங்கள் முதலியன முக்கிய இடம் பெற்றிருக்கின்றன. இவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும்போது, இந்தச்சிற்பக்காட்சி, அர்ச்சுனன் தபசைக் குறிப்பதல்ல என்றும் வேறு ஏதோ கதையைக் குறிக்கிறது என்றும் கருத வேண்டியிருக்கிறது.

இனி, மற்றொரு சாரார் கருதுகிறபடி இந்தச் சிற்பக்காட்சி பகிரதன் தபசைக்குறிக்கிறதா என்று பார்ப்போம். M. Victor Goloubeaw அவர்கள் கருதுகிறபடி, இச்சிற்பத்தின் நடுவில் காணப்படுகிற, கங்கை ஆறு இழிந்து ஓடுவது போன்ற காட்சி, முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஆனால் கங்கையில் நாக அரசனும் அவன் மனைவியும் ஏன் கணப்படுகிறார்கள்? மேலும் அவர் கூறுவதுபோல, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்கிறஉருவம் பகீரதனைக்குறிக்கிறது என்று ஒப்புக்கொள்வோமானால். அவனுக்கு எதிரில் நான்கு கைகளுடன் காணப்படுகிற உருவத்தைச் சிவன் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், இந்த உருவத்துக்குத் தலையில் கிரீடமகுடம் காணப்படுகிறது. சிவன் ஜடாமகுடம் உடையவர். அல்லாமலும் இவ்வுருவத்தின் கையில் கதாயுதம் போன்ற ஆயுதம் காணப்படுகிறது. சிவனுக்குச் சூலம், மழு முதலிய ஆயுதங்கள் உண்டேயன்றிக் கதாயுதம் கிடையாது. எனவே இந்த உருவம் சிவனைக் குறிப்பது அன்று. முக்கியமான இன்னொரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும். அதாவது பகீரதன் தபசு என்னும் கதையில், கங்கை ஆகாயத்திலிருந்து பூமியல்மிகவேகமாக இறங்கிய போது சிவபெருமான் அக்கங்கையைத் தமது ஜடையில் தாங்கிக் கொண்டார் என்பது. அந்தக்காட்சி, இந்தச்சிற்பத்தில் காணப்படவில்லை. இந்தச் சிற்பம் பகீரதன் தபசு என்னும் காட்சியைக்குறிப்பதாக இருந்தால், கங்காதரமூர்த்தியின் உருவம் இதில் இடம்பெற வேண்டும் அல்லவா? கங்காதரமூர்த்தியின் அழகான சிற்ப உருவங்கள் பல்லவ அரசர் காலத்தில் அமைக்கப்பட்டவை, இன்றும்