பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


சகர, சாகரர் கதை

ஜீத-சத்துரு என்னும் அரசன் பரத கண்டத்தை அரசாண்ட. காலத்தில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு அஜிதன் என்றும் இளைய குழந்தைக்குச் சகான் என்றும் அரசன் பெயரிட்டு வளர்த்தான். மூத்த குழந்தை வளர்ந்து வயதடைந்த பிறகு அஜீதநாதர் என்னும் தீர்த்தங்கரராக விளங்கி உலகத்திலே ஜைன மதத்தைப் பரவச்செய்து இறுதியில் வீடுபேறடைந்தார். இளைய பிள்ளையாகிய சகரன், பெரியவனாக வளர்ந்து, தனது தந்தைக்குப் பிறகு அரசாட்சியை ஏற்றுப் பரத கண்டத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினார். இந்தச் சகரசக்கரவர்த்தி அரசாட்சி செய்துவருங்காலத்தில், ஒரு சமயம் கண்டப்பிரபாத மலைக்குத் தன் மந்திரி முதலியவர்களுடன் சென்று நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து மூன்று நாள் நோன்பிருந்தார். இவர் நோன்பிருப்பதைத் தன்னுடைய சிம்மாசனம் துளங்கியதனால் அறிந்த நாட்டியமாலகன் என்னும் தெய்வம், சகரசக்கரவர்த்தியின் முன்பு தோன்றி, எண்ணிறந்த செல்வங்களைக் கொடுத்து. சக்கரவர்த்திக்கு வேண்டிய உதவிகளை எந்த நேரத்திலும் செய்யச் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தது. அந்த வரத்தை ஏற்றுக்கொண்ட சகரசக்கரவர்த்தி, தனது மந்திரிகளைக்கொண்டு அந்தத் தெய்வத்திற்குச் சிறப்பு செய்வித்து அனுப்பினார். பிறகு சக்கரவர்த்தி கங்கைக்கரையை யடைந்து, நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப் பெறுவதற்காக மூன்று நாள் கடுநோன்பிருந்தார். நோன்பின் முடிவில் நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அந்த ஒன்பது வகையான நிதிகளாவன :—

1-நைசர்ப்பம் 2-பாண்டுகம் 3-பிங்கலம் 4-மகாபத்மம் 5-காலம் 6-மகாகாளம் 7-மானவம் 8-சங்கம் 9-சர்வரத்னம் என்பன.

இந்த நவநிதிகள் ஒவ்வொன்றுக்கும் தலைமையாக ஒவ்வொரு தேவகுமாரனும், காவலாக ஆயிரம் ஆயிரம் பூதங்களும் இருந்தனர். ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும் அந்தந்த நிதியின் பெயரைக்கொண்டவர்கள். நவநிதியோடு தோன்றிய இவர்கள், சகரசக்கரவர்த்தியைப் பார்த்து, " உமது நல்வினையால்,