பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

இது, மாட்டுக் கொம்பின் உள்ளே பழங்களையும் பூக்களையும் வைத்திருப்பது போன்று காட்டப்படுவது வழக்கம். இந்த மேல்நாட்டுச் சிற்பம் நமது நாட்டுச்சிற்பங்களில் அமைக்கப்படுவது இல்லை. ஆகவே இது Cornicopia அன்று. அதில் இருப்பதுபோன்று இந்தப்பொருளில் பூக்களும் பழங்களும் காணப்படவில்லை. ஆனால், இது எதைக் காட்டுகிறது என்றால், தண்ட ரத்தினத்தைக் காட்டுகிறது. தண்ட. ரத்தினத்தினால் சாகரர் அகழி தோண்டி, அதனால் தான் கங்கையைக் கொண்டுவந்தார்கள் என்று கதை கூறுகிறது. அந்த தண்ட ரத்தினத்தைத்தான் ஒரு ஆள் கையில் வைத்திருப்பதுபோன்று இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அது கனமாக இருப்பதால் இந்த ஆள் இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்கிக்கொண்டிருக்கிறான். தண்ட இரத்தினத்தினாலே அகழி ஆழமாகத் தோண்டப்பட்டது என்பதையும், தண்ட ரத்தினத்தினாலே கங்கையாறு அகழிக்குக் கொண்டுவரப்பட்டது என்பதையும், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய கங்கையைப் பகீரதன் தண்ட இரத்தினத்தினால்தான் கடலில் கொண்டு போய் விட்டடான் என்பதையும் காட்டுவதற்கு இங்குத் தண்ட, இரத்தினம் சிற்பத்தில் காட்டப்பட்டிருப்பது பொருத்தம் அல்லவா?

கடைசியாக இந்தச் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ள கோயிலில் இருக்கிற உருவத்தைப்பற்றி விளக்கவேண்டுவது அவசியம் ஆகிறது. இந்தக்கோயில், கயிலாய மலையில் அமைக்கப்பட்டிருந்த ரிஷபதீர்த்தங்கரரின் கோயிலைக் குறிக்கிறது என்று கூறினேன். அப்படியானால், இதில் காணப்படும் உருவம் ரிஷபதீர்த்தங்கரர் உருவமாக இருக்க வேண்டும். ஆனால், இதில் காணப்படுவது திருமால் (விஷ்ணு) உருவமாகக் காணப்படுகிறது. இதன் காரணம் என்ன? ஜைன தீர்த்தங்கரராகிய ரிஷபதேவரின் உருவம் இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் உருவம் இருக்கக் காரணம் என்ன? இதற்கு இரண்டு விதமாக விடை... கூறலாம். முதலாவது காரணம்: திருமால் (விஷ்ணு ) ரிஷபதீர்த்தங்கரராக அவதாரம் செய்து ஜைன மதத்தைப் பரவச் செய்தார் என்று பாகவத புராணம் கூறுகிறது. அதாவது ரிஷப தீர்த்தங்கரரும் விஷ்ணுவும் ஒருவரே என்று கூறுகிறது. ஆகவே, சிற்பிகள் ரிஷப தீர்த்தங்கரருக்குப் பதிலாகத் திருமால் திருஉருவத்தை அமைத்தார்கள் போலும். இரண்டாவது காரணம் : விஜயநகர அரசர் ஆதிக்கம் இருந்த காலத்தில் கி. பி. 17-ஆவது நூற்றாண்டில், மகாபலிபுரத்தில் வைணவர் ஆதிக்கம் பலமாக இருந்தது. அக் காலத்து வைணவர்கள், மகாபலிபுரத்துச் சிற்பங்களில் சிலவற்றை மாற்றியிருக்கிறார்கள் என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன. (இங்கு வைணவர் ஆதிக்கம் இருந்த செய்தியையும் வைணவர்கள் இங்குச் செய்துள்ள சில காரியங்களையும் இல்விடத்தில் விளக்கினால் விஷயம் விரியும். ஆனதுபற்றி விளக்கவில்லை.) ஆகவே, வைணவர் காலத்தில், ஜைன உருவமாக இருந்த சிற்ப உருவத்தை மாற்றித் திருமால் உருவமாக அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.