பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

(இதுகாறும் விளக்கிக் கூறப்பட்ட சிற்பங்கள் தவிர, ஏனைய சில சிற்ப உருவங்கள் இதில் காணப்படுகின்றன. அவை பூனை ஒன்று தபசு செய்து கொண்டிருக்க அதனைச் சூழ்ந்து எலிகள் விளையாடுவது போன்றும், குரங்குகள், புலி முதலிய உருவங்களும் இச்சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இச்சிற்பத்தை அழகுபடுத்துவதற்காகச் சிற்பிகள் அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.)

அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் இருப்பதும், இச்சிற்பம் சகா சக்கரவர்த்தியின் கதையைக் குறிக்கிறதென்பதும் இதனால் விளக்கப்பட்டது. இந்தக் கதை, தமிழ்நாட்டிலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் அடைந்திருந்த அந்தக் காலத்தில் (கி.பி. 7-ஆம் நூற்கண்டில்), எல்லோரும் அறிந்திருந்த கதையாக இருக்கவேண்டும். ஆகையினால் தான், இக்கதையின் சிற்பத்தைச் சிற்பிகள் இப்பாறையில் செதுக்கிக் காட்டினார்கள் என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி, இப்பெரிய அழகிய கம்பீரமான சிற்பத்தை அமைத்ததின் நோக்கம் யாது? என்பதை ஆராய்வோம். முக்கியமான நோக்கம் இல்லாமல் இச் சிற்பத்தை அமைத்திருக்கமாட்டார்கள், இதில் ஒரு நீதி அமைந்திருக்கவேண்டும். அது யாது? எத்தகைய பேராற்றல் உடையவராக இருந்தாலும், பெறுதற்கு அரிய நவநிதிகளைப் பெற்று தெய்வங்களின் உதவியையடைந்திருந்தாலும், சக்கரச் செல்வனாக விளங்கிய சகர சக்கரவர்த்தியின் புதல்வராகவிருந்தாலும், ஊழ்வினைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்பதை உணர்த்தவே இச் சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்று தோன்றுகிறது. இக்கருத்தை உட்கொண்டு இக்கதையைச் சிற்பத்தில் நோக்குவோர்க்கு

வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

என்னும் திருக்குறளின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிகின்றது.

(குறிப்பு: இந்தக்கதையை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர், Trisashti Salaka Purusha Charitra Vol. II Translated by Helen M. Johnson. Gaekwads' Oriental Series) என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம். இந்த நூலில் கூறப்பட்ட கதைக்கும் இந்தச் சிற்பத்திற்கும் சிறிதும் வித்தியாசம் இல்லை. தமிழில் உள்ள ஸ்ரீபுராணம் ஜீவசம்போதனை என்னும் நூல்கள், சில மாறுதல்களோடு இக்கதையைக் கூறுகின்றன.)