பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாபலிபுரத்து
ஜைன சிற்பம்.

முன்னுரை.

மகாபலிபுரம் என்பது சென்னப் பட்டினத்துக்குத் தெற்கே 30 மைலில், கடற்கரை ஓரத்தில் இருக்கிற சிறு கிராமம். இது செங்கற்பட்டு ரயில் நிலயத்திலிருந்து கிழக்கே பதினெட்டுமைல் தூரத்தில் இருக்கிறது. இக்கிராமத்திற்குச் சென்னையிலிருந்தும், செங்கற்பட்டிலிருந்தும் பஸ் வண்டிகள் போகின்றன. மாவலிவரம் என்றும் மகாபலிபுரம் என்றும் இதற்கு இப்போது பெயர் வழங்கப்படுகிறது. இப்பெயரைக் கேட்டவுடனே மகாபலிச் சக்கரவர்த்தி கதை நினவுக்கு வருகிறது. ஆனால், மகாபலிச்சக்கரவர்த்திக்கும் மகாபலிபுரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. பல்லவ அரசர்களுக்கு இந்தப்பட்டினம் முற்காலத்திலே துறைமுகப் பட்டினமாக இருந்தது. பல்லவ அரசர்களில் ஒருவனான நரசிம்மவர்மன் என்னும் அரசன், தன்னுடைய சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை இந்த ஊருக்குச் சூட்டினான். ஆகவே இது மாமல்லபுரம் என்று வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தப் பெயர் சிதைந்து மகாபலிபுரம் என்றும் மாவலிவரம் என்றும் வழங்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, பல்லவ அரசர் காலத்தில் பெரிய துறைமுகப்பட்டினமாகச் சிறப்புடன் இருந்த இப்பட்டினம் இப்போது சிறு கிராமமாக இருக்கிறது. சிறிய கிராமமாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் பேர் பெற்றிருக்கிறது. அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களிலிருந்தும், சீனா, பர்மா, ஜப்பான், இலங்கை,