பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

இனி, இச் சிலைகளைக் காண்பதிலேயே மெய்ம்மறந்து விடாமல், வெளியே வர வேணும். தென்பக்கம் வடக்கு நோக்கி நிற்கும் கிரிராஜ கன்னிகாம்பாவையும் (இமவான் மகளாம் உமையைத்தான் இத்தனை படாடோபமாக நமக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள், அர்ச்சகர்கள்) வந்தித்து வணங்கலாம். கோயில் பிராகாரத்துக்குள்ளே மயில் வாகனக் கடவுளுக்கும் ஒரு கோயில், மண்டபத்துடன் சமீப காலத்தில் கட்டியிருக்கிறார்கள். ஆதலால் அவரையுமே வணங்கி வழிபட்டுவிட்டு வெளியில் வரலாம்.

திரு ஊறல் என்னும் இத் தக்கோலம் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர் என்பதைச் சோழர் சரித்திரம் படித்தவர்கள் அறிவார்கள். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மணலில் கோட்டத்திலே, திருநாம நல்லூரிலே இருந்து அரசாண்டவன் முதல் பராந்தக சோழன். அவன் மகனே ராஜாதித்யன்.

ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் இந்த ராஜாதித்யனோடு போர் தொடுக்கிறான். ராஷ்டிரகூடரும், சோழரும் கி.பி. 949 இல் போரில் கைகலந்த இடம் இத் தக்கோலமே, போர்க்களத்திலே யானை மீதிருந்தே உயிர். துறக்கிறான் ராஜாதித்யன். அதனால் யானை மேல் துஞ்சிய தேவன் என்ற பெயர் பெறுகிறான்.

போரில் வெற்றி பெற்ற கிருஷ்ணன், 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்' என்று விருதுப் பெயர் சூட்டிக் கொள்கிறான்.

ராஜாதித்யனுக்குப் பின் வந்த சோழர் இந்தக் கன்னட தேலரை யெல்லாம் விரட்டி அடித்துத் திரும்பவும் சோழப் பேரரசை நிலை நாட்டுகிறார் என்பது வரலாறு.

தக்கோலப் போர் சரித்திரப் பிரசித்தி பெற்றது. சண்டை நடந்த சமவெளியை ஊராரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் - அதில் அக்கறை உள்ளவர்கள். அதில் அக்கறை இல்லாதவர்கள், கோயிலில் உள்ள சிற்ப வடிவங்களைப் பார்த்து. உமை, உமாபதியைத் தரிசித்து விட்டுத் திரும்பி விடலாம், விரைவிலேயே.