பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

61

இத்தகைய குழப்பங்களை யெல்லாம் நோக்குகையில் பார்ப்பனர்களுடன் இணைந்து வாழும்வரை - அவர்களின் தனி நலத்திலேயே முழுக் கவனமும் செலுத்திக் கோடிக் கோடியாகப் பொதுப் பணத்தைக் கொட்டி அழும் நடுவணரசுடன் இணைந்து போகும் வரை நம் மக்களுக்கென்று எந்தத் தனித் திட்டத்தையும் வகுத்துக் கொள்ளக்கூட நமக்கு உரிமை கிடையாது என்றே எண்ண வேண்டியுள்ளது. கோயில் பூசனை முறைகள் போன்ற ஒரு சில துறைகளில் ஏற்படும் திருத்தங்களுக்குக்கூட எதிர்ப்புக் காட்டும் இப்பார்ப்பனர் சலசலப்புக்கெல்லாம் இனி விடை சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே நாம் கருதுகின்றோம்.

எனவே நம் தமிழக அரசினரும் தன்மானம் மிக்கத் தமிழர்களும் இனி தமிழகப் பிரிவினைக்குப் போராடித்தான் தீரல் வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே தன்மானத் தலைவர் பெரியார் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை உடனடியாகத் தொடங்கி, எதிர்காலத் தமிழ் மக்களையேனும் முழுவுரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழச் செய்வதற்கு வழிவகுக்க முன் வருதல் வேண்டும் என்று தலைவணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு போராடத் தொடங்கின் நாமும் எம்மைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மறவர்களும் அவர்தம் கட்டளைக்குத் தலைவணங்கி, அவர் இட்ட கட்டளையை ஏற்று, எந்தமிழுக்காகவும் இந்நாட்டிற்காகவும் போராடுவோம் என்று சூளுரைத்துக் கூறுகின்றோம். அந்த நல்ல நாள் விரைவில் வருவதாகுக!

- தென்மொழி : சுவடி : 8, ஓலை 7, 1970