பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/39. முத்துமாரி

விக்கிமூலம் இலிருந்து

39. முத்துமாரி

உலகத்து நாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!