பக்கம்:ஆண்டாள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

119


ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந் தேலோர் எம்பாவாய்

- திருப்பாவை : 2

இந்நோன்புக் காலத்தில் திருமாலே, நீலவண்ணனே, பெரியோர்கள் மேற்கொண்டு வந்த மார்கழி நீராட்டத்தை மேற்கொள்ளுதற்கு வேண்டும் பொருட்களைக் கேட்பாயாகில் பூவுலகமெல்லாம் நடுங்க, ஒலிக்கும் பால் போன்ற வெண்ணிற முடைய உன் பாஞ்சசன்னியம் என்கிற சங்கைப்போல் இருக்கும் சங்குகளும், சிறப்பு வாய்ந்த மிகப் பெரியதோற் கருவிகளும், பல்லாண்டு பாடுவோரும், அழகிய விளக்குகளும் கொடிகளும் அவற்றிற்கு மேல் கட்ட வேண்டிய சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் கண் வளர்பவளே! இவையனைத்தையும் எங்களுக்குத் தருவாயாக.

மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்

- திருப்பாவை : 26

நோன்பு முடித்ததும் மகளிர் புனைந்து மகிழும் கோலம் "கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா' எனத் தொடங்கும் திருப்பாவை பாடலிற் சொல்லப்பட்டுள்ளது.

எதிரிகளை வெற்றிக்கொள்ளும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப் பாடிப் பயனடைந்து அதன் விளைவாக நாங்கள் பெறும் பரிசு யாதெனில், நாட்டிலுள்ளவர் புகழ்வதற்கு அருகதையாகவுள்ள கைவளை, வங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/121&oldid=1462124" இலிருந்து மீள்விக்கப்பட்டது