அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 109
வருந்தற்க. நாங்கள் உடன் பிறந்தவர்கள் நால்வராயிருந்தோம் இப்போது உன்னையும் சேர்த்து ஐவரானோம் என்பது ஆறுதல் மொழி.
துன்புளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்புளது இடை மன்னும் பிரிவுஉளது என உன்னேல்
முன்புளேம் ஒரு நால்வேம் முடிவுளது என உண்ணா அன்புள இனி நாமோர் ஐவர்கள் உளர் ஆனோம்
(43)
பிரிவினால் வருந்தல் கூடாது என்பதை, இராமன் சுற்றி வளைத்துக் குகனுக்குக் கூறுவது சுவையாயுள்ளது.
கமலம் போன்றன
காட்டில் இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் சென்று கொண்டிருந்தபோது பகல் போய் அந்தி நேரம் வந்தது. அப்போது தாமரை மலர்கள் குவிந்தன; ஆம்பல் முதலியவை மலர்ந்தன. ஆனால், இம் மூவரின் கைகளும் கண்களும் தாமரை மலர்போன்றிருந்தனவாம்.
<poem>மொய்யுறு நறுமலர் முகிழ்த்த வாம்சில மையறு நறுமலர் மலர்ந்த வாம்சில ஐயனோடு இளவற்கும் அமுது அனாளுக்கும் கைகளும் கண்களும் கமலம் போன்றவே</poem> (42)
இதன் கருத்து என்ன? அந்தி மாலைப் பொழுது வந்ததும், மூவரும் தாமரை போன்ற கைகளைக் குவித்துக் கொண்டும் தாமரை போன்ற கண்களை மூடிக்கொண்டும் இறையை உன்னிக் கும்பிட்டுத் தொழுதனராம். கைகளுக்கும் கண்களுக்கும் தாமரையை உவமிப்பது ஒரு மரபு. இங்கே, மூடிய தாமரை மலர்களைப் போலவே, மூவரின் கைகளும் கண்களும் வழிபாட்டின்போது மூடிக் கொண்டனவாம்.