பக்கம்:அமுதும் தேனும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

70


நல்வெளிச்சம், அல்லிப்பூ இரவில் தோன்றி
நகர்ந்துசெல்லும் நிலாவெளிச்ச மாகும். கொல்லை
முல்லைமலர் போன்றவளாம் அவளும் கொற்கை
முத்துநிலா வெளிச்சந்தான் அந்தப் பெண்ணின்
பல்வெளிச்சம், பவளஇதழ் வெளிச்சம், பார்வைப்
பட்டினத்து மீன்வெளிச்சம் பட்டு, வைரக்
கல்வெளிச்சம் போலானான். அதுநாள் மட்டும்
காணாத ஒவியத்தை ஆங்கே கண்டான்.

பட்டாடை கட்டிவந்த நிலவோ; வெள்ளிப்
படிக்கட்டில் நடந்துவந்த சிலையோ! யாரும்
வெட்டாமல் உருப்பெற்ற கடலை விட்டு
வெளிவந்த வெண்முத்தோ! மலர்ப்பூங் கொத்தோ!
கொட்டாவி விடத்தெரிந்த முல்லைப் பூவோ!
குயிலுக்கே குரல்கொடுக்கும் குயிலோ கையால்
தொட்டாலும் இனிக்கின்ற கரும்போ தேனோ!
தூங்காத தாமரையோ! தங்கத் தேரோ!

வினையுவமை பயனுவமை உறுப்ப மைப்பை
விளக்குகின்ற மெய்யுவமை மற்றும் வண்ணம்
தனைக்குறிக்கும் உருவுவமை என்று கூறும்
தமிழ்மொழிநூல் இலக்கணத்திற் கேற்ப; இப்பெண்
விளைபயன்மெய் உருஇவற்றின் கூட்டோ! அந்த
வெள்ளிநிலா இவள்முகத்திற் கெடுத்துக் காட்டோ!
மனமயக்கம் உண்டாக்கும் இவள்யார்? செம்பொன்
வார்ப்படமோ? தேன்குடமோ? வான வில்லோ!