பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/4. கிளி விடு தூது

விக்கிமூலம் இலிருந்து
4. கிளி விடு தூது
பல்லவி

சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-

அனுபல்லவி


வல்ல வேல் முருகன் தனை யிங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)

சரணங்கள்


1.
தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2.
அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கொர்
முல்லைச் செடியதன்பாற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3.
பாலை வனத்திடையே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)