336
ஆத்மஜோதி
மேலும் பேயாழ்வார் சிவனையும் திருமாலையும் ஒன்றாகக் காணும்காக்ஷியை
“தாழ் சடையும் நீள்முடியும், ஒண் மழுவும், சக்கரமும் சூழ்அரவும் பொன் நாணும் தோன்றுமால் - சூழும், திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைத்து! (63. III திருவந்தாதி) , என்று எவ்வளவு அழகாகக் கூறுகிறார் அது போலவே திருநாவுக்கரசரும்
“நாரணன்கான், நான் முகன் காண், நால்வேதன் காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன, பூரணன் காண் புண்ணியன் காண்..... காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுள்ளானே!“
என்று பாடி கண்டு மகிழ்ந்தார்.
பேயாழ்வார் கண்ட காக்ஷி திருவேங்கடத்தில், அப்பர் பெருமான் கண்டது திருக்காளத்தியில்! இவ்விருவர் கண்ட காட்க்ஷிகண்ணுள்ளும் கருத்துள்ளும் ஒன்றாய் இலங்குகின்றது. எனவே சிவசக்தி போன்று - ஹரி ஹரனும் ஒன்றே இது பற்றியே தமிழரிடையே தொன் மொழி ஒன்றுண்டு; அதாவது: “அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு“ என்று! இது கிராமிய இலக்கியமே யாயினும் இப்பழமொழியில் ஆழ்ந்தகன்ற நுண்ணிய கருத்து இருக்கிறதன்றோ!!
“வைஷ்ணவ ஸ்தலம்“ என்ற திருவேங்கடம் ஆழ்வார்கள் காலத்திற்கும் முன்பிருந்தே இலங்குகின்றது. ஆங்கு எழுந்தருளியுள்ள மூர்த்தியை வெங்கடேச்வரர் என்று கூறுவர். இவ்விடத்தே, திருப்புகழ் பாடிய ஸ்ரீ அருணகிரி, நாதர் கண்டது முருகனையே! தனது திருப்புகழில், .
........ நாரண னார் மரு
மகனாங் குகனேபொழில் சூழ்தரு
திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே”
என்று புகழ்பாடுகிறார்
அனுபூதிமான்கள் கண்களுக்கு கடவுள் அவரவர் மனப்பாங்கிற்கு ஒப்ப காக்ஷி தருகின்றார் என்பதை நாம் அறிய வேண்டும். எனவே ஸ்ரீ ஆண்டாள், தன் மனத்திற் கொப்ப நாராயணனேயே வரித்தாள்.