பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

ளிலும் அந்த இந்திரியங்களுக்கு இன்பம் அளிக்கப் பலவிதமான ஏற்பாடுகளைச் செய்தார்கள். நம்முடைய நாட்டிலுள்ள ஆலயத்தில் கொடுக்கும் பிரசாதம் வேறு எந்த நாட்டு ஆலயத்திலும் கிடையாது. ஐந்து இந்திரியங்களின் வாயிலாக உலகத்திலே உள்ள பொருள்களை அநுபவிக்கின்ற மனிதனை, இறைவன்பால் அழைத்துச் செல்ல அவனுடைய இந்திரியங்களை எல்லாம் வசப்படுத்துவதற்கு, இத்தகைய பல காரியங்களை ஆலயத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள்.

அலங்காரம்

ஆகவே, கண்ணுக்கு இன்பம் அளிக்க ஆண்டவனது திருவுருவங்களுக்கு அலங்காரம் பண்ணினார்கள்.

இறைவனுக்கு மாத்திரம் அலங்காரம் பண்ணவில்லை. இறைவன் வீற்றிருக்கிற ரதத்திற்கும் அலங்காரம் பண்ணினார்கள். ரதத்தின் கீழே இருக்கிற சக்கரம் முதற்கொண்டு தேர் அச்சு வரையில் உள்ள எல்லாவற்றுக்கும் அலங்காரம் பண்ணினார்கள். இறைவன் திருவுருவத்திற்கு அலங்காரம் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிற சப்பரத்திற்கு அலங்காரம்; சப்பரம் இருக்கிற தேருக்கு அலங்காரம்; தேர் ஓடுகிற சக்கரத்திற்கு அலங்காரம்; சக்கரம் ஒடுகிற வீதிக்கு அலங்காரம்; வீதியிலுள்ள வீடுகளுக்கு எல்லாம் அலங்காரம் - இவ்வளவு விதமான அலங்காரத்தினாலும் கவரப் பெற்ற மனம், இவ்வளவுக்கும் நடுநாயகமாக விளங்குகின்ற இறைவன் திருவுருவத்தின்பால் கவிகிறது. மனம் நேராக இறைவனிடத்தில் போய்ப் பாயாது. அங்கங்கேயுள்ள அலங்கரிக்கப்பட்ட பொருள்களின் மீது பாய்ந்து, ஒன்றை விட்டு ஒன்றாகத் தாவிக் கடைசியில் இறைவன் திருவுருவத்தின்பால் சென்று நிற்கிறது.

சாப்பிடும்போது எல்லாம் வயிற்றுக்குள்தானே போகிறது என்று ஒரேயடியாக உருட்டித் திரட்டிச் சாப்பிடுகிறோமா? குருடன்தான் அப்படிச் சாப்பிடுவான். தலைவாழை போட்டு அதில் பலவிதமான வர்ணமுடைய பதார்த்தங்களைச் சுற்றி வைத்து வெள்ளை வெளேர் என்று இருக்கும் அன்னத்தை நடுவிலே வைத்தால் அதைச் சாப்பிட நம் மனம் விரையும்;

28