பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


இவையெல்லாம் மனம்போல வாழ்கின்ற வாழ்க்கையினால் கிடைக்கின்ற மணியான பயன்கள் ஆகும்.

உலகத்துச் சுகத்தை எல்லாம், உணவு, உடை, உறையுள் என்று மூன்றாகப் பிரித்துக்காட்டி விடுவார்கள். இந்த மூன்றையும் அனுபவிக்க உடல் அவசியம். அல்லவா?

உணவை இரசித்துச் சாப்பிட உடல் நலம் அவசியமாகும். வயித்தியச் செலவும், பத்தியச் சோறும் ஒருவனைப் பாடாய்ப் படுத்தி விடும். அவன் சேர்த்து வைக்கின்ற சொத்துக்கூட அவனுக்கு எதிரியாக இருக்குமே அல்லது உறவாய் இருந்து உதவாது.

உண்ணுகிற உணவு, உணவுப் பண்டத்தை ஆழ்ந்து, ரசித்து, அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான் உணவு என்றார்கள். வாயை விரித்துக் கொண்டு சாப்பிடும் சாப்பாடு உடம்புக்குச் சங்கடத்தையும், சகலவிதமான துன்பங்களையுந்தான் ஏற்படுத்தி விடுமே தவிர, நன்றாக வாழ்வை உருவாக்காது. ஆகவே சாப்பாட்டுப் பிரியர்களாக வாழாமல், உணவு ரசிகர்களாக இருந்து உண்டு மகிழுங்கள்.

எப்பொழுதும் உடம்பின் மேலே ஒரு கண் வைத்து இருங்கள். இயற்கைக்கேற்ப எப்பொழுதும் மாறிக் கொண்டேயிருக்கும் உடம்பின் மாற்றத்தை அறிந்து மாற்றத்துக்கேற்றவாறு நடந்து கொள்ளுங்கள். உடம்பை வீணாக்கிவிட்டு, உலக வாழ்வை இரசிக்கலாம் என்று எண்ணாதீர்கள். அது தவறான அணுகுமுறையாகும்.