தியாக பூமி/பனி/பனி மறைந்தது

விக்கிமூலம் இலிருந்து

பனி மறைந்தது

சாவித்திரிக்குச் சம்பு சாஸ்திரி எழுதிய கடிதத்தில் நாகப்பட்டினத்தில் தமக்குக் காரியம் இருப்பதாக எழுதியிருந்ததைப் படித்து, "அது என்ன அவ்வளவு முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம் நாகப்பட்டினத்தில் இருந்தது.

சாஸ்திரியார், சாவித்திரியின் கல்யாணத்துக்காக வாங்கிய கடன் ரூபாய் பத்தாயிரம் வட்டியுடன் சேர்ந்து இப்போது ரூ.13,500 ஆகியிருந்தது. குடமுருட்டி உடைப்பு, அதன் பயனாக ஏற்பட்ட மகசூல் நஷ்டம், மற்ற உபத்திரவங்கள் காரணமாக, வருஷா வருஷம் வட்டி கூடக் கொடுக்க முடியவில்லை. இத்துடன், சாஸ்திரியின் நிலத்திலும் இரண்டு வேலி மண்ணடித்துப் போய்விட்டதென்பது தெரிந்த பிறகு, கடன்காரன் பணத்துக்கு நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தான். அது ஒன்றும் பயன்படாமல் போகவே, நாகப்பட்டினம் கோர்ட்டில் தாவா செய்து விட்டான்.

மகசூலை விற்றுக் கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கை சாஸ்திரிக்கு இப்போது கிடையாது. 'நிலத்தை விற்க வேண்டியதுதான், வேறு வழியில்லை' என்று அவர் எண்ணிக் கொண்டிருந்த சமயம், சம்பந்தியம்மாளை நரசிங்கபுரத்தில் போய்ப் பார்க்கும்படி கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது. அந்தப்படியே சாஸ்திரி நரசிங்கபுரம் போய், சம்பந்தியம்மாளைப் பார்த்தார். அந்த அம்மாள் சாஸ்திரியார் செய்திருக்கும் குற்றங்களுக்கெல்லாம் ஜாபிதா கொடுத்து, அவரைத் திணற அடித்த பிறகு, "என்ன இருந்தாலும், இனிமேல் அவள் எங்காத்துப் பெண். நான் அழைச்சுண்டு போறேன். ஆனால், ஆடி ஆறா மாதம் தீபாவளி முதல் சாந்திக் கல்யாணம் வரையில் செய்ய வேண்டியதுக்கெல்லாம் சேர்த்து, மூவாயிரம் ரூபாய் கையில் கொடுத்துடணும். இல்லாட்டா பெண் உங்காத்திலேயே இருக்க வேண்டியதுதான்" என்று கண்டிப்பாய்ச் சொன்னாள்.

நிலம் விற்பதைப் பற்றி சாஸ்திரிக்கு இருந்த சிறிது சந்தேகமும் இப்போது நிவர்த்தியாகி விட்டது. வேறு வழியில் ரூ.3,000 சம்பாதிக்க முடியாது. மேலும், குழந்தை சாவித்திரி மட்டும் புருஷன் வீட்டுக்குப் போய் விட்டாளானால், அப்புறம் நிலம், நீச்சு, வீடு வாசல் எல்லாம் யாருக்கு வேணும்? தமக்கும் மங்களத்துக்கும் அரை வயிற்றுச் சாப்பாட்டுக்குப் பகவான் படி அளக்காமல் போகிறாரா?

இவ்வாறு எண்ணி சாஸ்திரி நரசிங்கபுரத்திலிருந்து நேரே நாகப்பட்டினத்துக்குப் போனார். கடன் கொடுத்த முதலாளியையும், முதலாளியின் வக்கீலையும் கண்டு பேசினார். கோர்ட்டில் கேஸ் நடத்தி ஏகப்பட்ட பணச் செலவு செய்து கட்டிக்கப் போகிற நிலத்தை இப்போதே கட்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அந்த முதலாளியும் வக்கீலும் ஏற்கெனவே சம்பு சாஸ்திரியிடம் மதிப்பு வைத்திருந்தவர்கள். ஆகவே, சம்பு சாஸ்திரி, அடியோடு அழிந்து போவது அவர்களுக்கும் திருப்தியளிப்பதாயில்லை. கடைசியில், சாஸ்திரிக்கு இன்னொரு ரூ.3,000 ரொக்கம் கொடுத்து, வீட்டையும் முக்கால் வேலி நிலத்தையும் ஒதுக்கி விட்டு, பாக்கியையெல்லாம் கடனுக்கு ஈடாக வாங்கிக் கொள்வதென்று முடிவாயிற்று. அந்தப்படியே பத்திரமும் எழுதி முடிந்து, சாஸ்திரியார் ரொக்கம் ரூ.3000-த்துடன் நெடுங்கரைக்குத் திரும்பினார். நாகப்பட்டினத்தில் அவருக்கிருந்த முக்கியமான காரியம் இதுதான்.

ஆனால் இந்த விவரம் எதுவும் சாவித்திரிக்குத் தெரியாது. வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது. சாஸ்திரியார் "இதைச் சொல்வதற்கு இப்போது என்ன அவசரம்? எப்படியாவது குழந்தை முதலில் சந்தோஷமாய்ப் புக்ககத்துக்குப் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று இருந்தார். ஆகவே, நரசிங்கபுரத்தில், சம்பந்தியம்மாளிடம் சாஸ்திரி ஒரு கவரைக் கொடுத்து. "அம்மா! ரூபாய் மூவாயிரம் மூணு நோட்டாயிருக்கு. பத்திரம்! ஜாக்கிரதையாய் எண்ணி எடுத்து வச்சுக்குங்கோ!" என்று சொன்னபோது சாவித்திரிக்குப் பகீர் என்றது. அப்பா பணம் என்னத்திற்குக் கொடுக்கிறார் என்பதே அவளுக்கு முதலில் புரியவில்லை. "ஏற்கெனவே அப்பாவுக்குக் கடன் உபத்திரவமாயிற்றே! இப்போது இது வேறு சேர்ந்ததா? ஆனால் என்னத்திற்காகப் பணம்?" என்று திகைத்தாள். பிறகு நடந்த சம்பாஷணையின் போது ஒருவாறு அவளுக்கு விஷயம் புரிந்தது. சாஸ்திரி தங்கம்மாளைப் பார்த்து, "எனக்கு இப்போது சிரமதசை, தொகை என் சக்திக்கு மேற்பட்டதுதான். இருந்தாலும், உங்க மனது கோணப்படாதுன்னு எப்படியோ பணந் தயார்ப்பண்ணிண்டு வந்தேன்" என்றார்.

"சரிதாங்காணும்; ஏதோ பிரமாதமாகச் செய்துட்டதாக நினைச்சுக்க வேண்டாம். ஒவ்வொருத்தர் பொண்களுக்குச் செய்யறதுக்கு இது உறைபோடக் காணாது. அப்படி ஒண்ணும் அதிகமா உம்மை நான் கேட்கலையே. இப்போ, ஒரு சாந்திக் கல்யாணம்னு செய்திருந்தா, ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்காவது செய்திருக்கணுமோ, வேண்டாமோ?" என்றாள் தங்கம்மா.

"அது கிடக்கட்டும், அம்மா! உலகத்திலே பணந்தானா பெரிய விஷயம்? பணம் வரும், போகும். ஆனா, மனுஷ்யா கிடைக்கமாட்டா. எப்படியோ குழந்தையை உங்க கிட்ட ஒப்படைச்சுட்டேன். சாவித்திரி தாயில்லாப் பெண், அம்மா! இனிமே நீங்கதான் அவளைக் காப்பாத்தணும். உங்க பெண் மாதிரி பார்த்துக்கணும்" என்றார் சாஸ்திரியார்.

உணர்ச்சி மிகுதியினால் சாஸ்திரி உரத்த குரலில் பேசினார். எவ்வளவுக்குச் சத்தம் போட்டு பேசுகிறோமோ, அவ்வளவுக்குத் தங்கம்மாளின் கல்நெஞ்சில் அது பதியும் என்று அவர் எண்ணியது போலிருந்தது.

ஆனால் இது சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை. 'ஐயோ! என்னத்துக்காக அப்பா இப்படிக் கத்தறார்? செவிட்டு வைத்தியோடு பேசிப்பேசி, அப்பாவுக்குத் தொண்டை பெரிசாய்ப் போயிடுத்து' என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

சாஸ்திரி சொன்னதற்குத் தங்கம்மாள், "அதுக்கென்னங்காணும்? பேஷாய்ப் பார்த்துக்கறேன், மூணு பொண்ணோட, சாவித்திரி நாலாவது பொண் என்று நினைச்சுக்கறேன். ஆனா நீர் மாத்திரம் முன்னே மாதிரி கவனிக்காம இருந்திடாதேயும், வளைகாப்பு, சீமந்தம் எதெதுக்கு எப்படி எப்படிச் செய்யணுமோ, அதெல்லாம் சரியாய்ச் செய்யணும்" என்றாள்.

இந்த சம்பாஷணை சாவித்திரியின் மனதைப் புண்படுத்தி விட்டது. ஊரிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகத்தில் பாதி போய் விட்டது. மாமியாரிடம் எவ்வளவோ பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அவள் மனதிற்குள் தீர்மானித்திருந்தாள். ஆனால் இப்போது, 'ஐயோ! இப்படிப்பட்ட மாமியாரிடமிருந்தா நாம் குடித்தனம் பண்ணப் போகிறோம்?' என்ற பயம் மட்டுந்தான் மிஞ்சி நின்றது. இத்தகைய மனுஷியிடம் எப்படி பக்தி கொள்ள முடியும்?

மாமியாருடைய அல்பத்தனத்துடன், அப்பாவின் பெருந்தன்மையையும் சாவித்திரி மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தாள். ஐயோ! தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் ஏற்பட்ட கஷ்டம், கவலையெல்லாம் போதாதா? இன்னமும் தன்னால் துயரந்தானா? பணம் எப்படிச் சேகரம் பண்ணினாரோ, தெரியலையே? பழைய கடனுக்கு வட்டி கூடக் கொடுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாரே! ஒருவேளை...நிலம் விற்பதைப் பற்றிப் பிரஸ்தாபமிருந்ததே! விற்று விட்டாரோ?

நாலு வருஷத்துக்கு முன் சம்பு சாஸ்திரிக்கு ஊரில் இருந்த அந்தஸ்தையும், அவருடைய இப்போதைய நிலைமையையும் சாவித்திரி எண்ணி மனம் உருகினாள். நிலத்தையும் விற்று விட்டால் அப்புறம் குடும்பத்தின் கதி என்ன? சித்தியும் பாட்டியும், "உன்னால் தான் இந்தக் குடித்தனம் பாழாச்சு!" என்று அடிக்கடி இடித்துக் காட்டியபோது கோபம் கோபமாய் வந்ததே! அவர்கள் சொன்னதில் என்ன தவறு? அப்பாவை - இத்தகைய உத்தம குணமுள்ள அப்பாவை - இவாளெல்லாம் இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே, இது தர்மமா? "இவாளெல்லாம்" - என்ற போது, சாவித்திரி தன் கணவனையும் உட்படுத்தியே எண்ணினாள். அவருக்கு என்னதான் தாயார் தகப்பனாரிடம் பக்தி இருக்கட்டும்; அதற்காக நியாய அநியாயம், ஈவிரக்கம் ஒன்றும் பார்க்க வேண்டாமா? அவருக்கு அவருடைய அப்பா அம்மா எப்படியோ, அப்படித்தானே எனக்கும் என் அப்பா? என் அப்பாவைக் கஷ்டப்படுத்தி, அவருடைய தாயார் தகப்பனாரைத் திருப்தி பண்ண வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது?

ஏதோ போனதெல்லாம் போகட்டும்; இனிமேல் அப்பாவுக்குத் தன்னால் எவ்வித கஷ்டமும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாவித்திரி மனதிற்குள் உறுதி செய்துகொண்டாள். தான் மட்டும் ஸ்ரீதரனுடன் பேசிப் பழக ஆரம்பித்து விட்டால், இந்த மாதிரியெல்லாம் ஒரு நாளும் நேராது. ஒரு வேளை, இப்போது கூட அவருக்கு இந்த மாதிரி அம்மா பணங்கேட்டு வாங்குவதெல்லாம் தெரிந்திருக்காது. அது தெரியும்போது கட்டாயம் அம்மாவைக் கோபித்துக் கொள்வார். அப்போது தான் குறுக்கிட்டு, "போனது போகட்டும், விடுங்கள். எங்கப்பா எனக்குச் செய்யாமல் வேறே யாருக்குச் செய்யப் போகிறார்? இனிமேல் அவரைக் கஷ்டப்படுத்தாமலிருந்தால் சரி!" என்று அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சமாதானம் பண்ணி வைக்கவேணும் - சாவித்திரிக்கு இப்படியெல்லாம் யோசனை போயிற்று.

அன்றிரவு, சம்பு சாஸ்திரி சாவித்திரியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். மாமனார் மாமியாரிடத்திலும், புருஷனிடத்திலும் அவள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். "குழந்தை! நீ எவ்வளவோ படித்திருக்கிறாய்; கேட்டிருக்கிறாய். புதிதாக உனக்கு நான் ஒன்றும் சொல்லவேண்டாம். இனிமேல் உன் புருஷன் தானம்மா உனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம். அந்த நாளிலே நமது தேசத்திலிருந்த சீதை, தமயந்தி, சாவித்திரி, முதலிய பதிவிரதா ரத்னங்களைப் போல் நீயும் புருஷன் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். உன் மாமனார் மாமியாரிடத்திலும் பயபக்தியுடன் நடந்துகொண்டு நல்ல பேர் வாங்கவேண்டும். மனுஷ்யர்கள் என்று இருந்தால் குற்றங் குறைகள் எவ்வளவோ இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். உன்னால், பிறந்த இடத்துக்கும் புகுந்த இடத்துக்கும் பெருமை வரவேண்டும் அம்மா!" என்று பரிவுடன் சொன்னார்.

அப்பாவுக்குத் தன்னால் நேர்ந்த கஷ்டங்களைப் பற்றி சாவித்திரி கொஞ்சம் பிரஸ்தாபித்தாள். "ஏற்கெனவே கடன் அடைக்க முடியாமலிருந்ததே; இந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்தால் எப்படி அடைக்கிறது? நிலத்தை விற்கும்படியாயிருக்குமோ அப்பா!" - என்று கேட்டாள்.

"அதற்கெல்லாம் நீ கவலைப்படாதே, குழந்தை!" என்றார் சாவித்திரி. ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "சொந்தமாவது, நிலமாவது? நாம் கொண்டு வந்தோமா? கொண்டு போகப்போகிறோமா? இந்த உலக வாழ்வைப் புல் நுனிமேல் உள்ள பனித்துளிக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள் நம் பெரியவர்கள். பனிக் காலத்தில் அதிகாலையில் எழுந்து பார்த்தால், புல்லின் நுனியில் நீர்த்துளி நிற்கும். சூரியோதயம் ஆகும்போது, சூரிய கிரணம் அந்தப் பனித் துளியின்மேல் விழுந்ததும், ஒரு நிமிஷ நேரம் அது பளபளவென்று ஜொலிக்கும். அடுத்த நிமிஷம் இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடும். அந்தப் பனித்துளியைப் போல் நிலையற்றது இந்த வாழ்க்கை. இப்படிப்பட்ட அநித்யமான மனித ஜன்மம் சாபல்யமடைய வேண்டுமானால், சத்தியத்தைச் சொல்ல வேண்டும், தர்மத்தைச் செய்ய வேண்டும், பகவானை ஸ்மரிக்க வேண்டும். ஆனால் ஸ்திரீகளுக்கோ இந்த சிரமம் ஒன்றும் நம்ம பெரியவாள் வைக்கவில்லை. புருஷன் மனங் கோணாமல் நடந்தால் போதும்; ஸ்திரீகள் வேறு ஒரு தர்மமும் செய்ய வேண்டாம்; பகவானைக் கூட நினைக்க வேண்டாம்" என்று தர்மோபதேசம் செய்தார். மறுபடியும், "சாவித்திரி! நீ இனிமேல் என்னைக் கூட மறந்துவிட வேண்டும்! நான் என்னமாயிருக்கிறேனோ, எப்படியிருக்கிறேனோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வருத்தப்படாதே. எனக்கு இனி மேல் உலகத்தில் ஒரு கவலையுமில்லை. நீ பச்சைக் குழந்தையாயிருந்த போது உன்னை என் தலையில் சுமத்திவிட்டு உன் தாயார் போய்விட்டாள். அந்தக் காலத்தில் உன்னை நோய் நொடியில்லாமல் வளர்த்து எடுப்பதற்குக் கவலைப்பட்டேன். பிறகு, உன்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன். அப்புறம், உன்னைப் புக்ககத்திற்கு அனுப்புவதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். என் தலையில் சுமத்தியிருந்த பாரம் இன்றோடு தீர்ந்தது. இனி மேல் எனக்கு ஒரு கவலையுமில்லை. சந்தோஷமாய் பகவத் பஜனையில் காலத்தைக் கழிப்பேன்" என்றார்.

இப்படியெல்லாம் தர்மோபதேசம் செய்தவருக்கு - வேதாந்த ஞானம் பேசியவருக்கு - மறுநாள் சாவித்திரி ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், ஏன் அப்படி இருதயம் பதை பதைத்தது?

கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது முதல் ஊருக்குப் போவதில் குதூகலமாயிருந்த சாவித்திரிக்குத்தான் அப்படி ஏன் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது?

இதோ, மணி அடித்து விட்டார்கள். ரயிலும் ஊதியாயிற்று. "குப்" "குப்" என்று புகை விட்டுக் கொண்டு வண்டி நகரத் தொடங்கி விட்டது. "குழந்தை!..." என்றார் சாஸ்திரி. மேலே "போய் வரயா?" என்று கேட்பதற்கு நா எழவில்லை.

"அப்பா! போய் வரேன்! நீங்க சொன்னதையெல்லாம் ஞாபகம் வச்சுண்டு சமத்தாயிருக்கேன். நீங்கள் கவலைப் படாதேங்கோ. கடுதாசி மாத்திரம் போட்டிண்டிருங்கோ!..." இப்படியெல்லாம் ரயில் புறப்படும்போது சொல்லவேண்டுமென்று சாவித்திரி நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவற்றில் "அப்பா!..." என்னும் முதல் வார்த்தை ஒன்று தான் வாயிலிருந்து வந்தது.

அந்தப் பட்டப்பகல் வேளையில், திடீரென்று பனி பெய்து உலகத்தை மறைத்தது போல் சாஸ்திரிக்குத் தோன்றிற்று. சாவித்திரி, தங்கம்மாள், ரயில், ரயிலுக்குப் பின்னாலிருந்த ஸ்டேஷன், ஸ்டேஷனுக்கு அப்பாலிருந்த மரங்கள் - எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மங்கி மறைந்தன. உண்மையில் பனி பெய்யவில்லை, தம் கண்ணில் தளும்பிய ஜலம்தான் அப்படிப் பனிப் படலத்தைப் போல் மறைத்தது என்று சாஸ்திரி உடனே தெரிந்து கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டார். மறுபடி அவர் நிமிர்ந்து பார்த்தபோது, ரயில் வெகுதூரம் போய் விட்டது. வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த சாவித்திரியின் முகம் ஒரு விநாடி தெரிந்து, அப்புறம் மறைந்து விட்டது.