1
எழில் கொஞ்சும் காலை நேரம்.
சென்னை நகரின் பரபரப்பிலிருந்து விலகி அமைதியாக இருந்தது அந்தப்பகுதி.
எடுத்துக்கொண்ட செயலில் முழு ஈடுபாடும், ஆழ்ந்த கவனமும் இருந்தால் சுற்றிலும் என்ன நடந்தாலும் நமது கவனம் கலையாது என்பது உண்மைதான்போல.
தன்னை மறந்த லயத்தின் கட்டுப்பாட்டுணர்வுடன், நாடக விமரிசனத்தின் எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தான் அம்பலத்தரசன்.
எழுதி முடித்த தாள்களின் வரிசையில் மேலும் ஒருதாளை எழுதி முடித்து இணைத்துவிட்டுத் தலையை நிமிர்த்தியபோது, அவனிடமிருந்த ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது. நெஞ்சில் எழுந்த சலனத்தைச் செம்மைப்படுத்த முடியாமல் தவித்த அப்பெருமூச்சுக்கு இதம் அளிக்கும் வகையில் அவன் புதிய உணர்வின் தெம்போடு அடுத்த சிகரெட்டைப் பற்றவைத்துப் புகையை இனம்புரியாத வெறியுடன் ஒரே மூச்சாக இழுத்துக் கக்கினான். உள்ளடங்கிப்போன புகைச்சலின் விளைவாக புகைச்சல் இருமல் வெளிப்பட்டது. இரண்டு மூன்று தரம் இருமினான். ஏற்கனவே கலங்கிவிட்டிருந்த கண்கள் இப்போது இருமலின் காரணமாக மேலும் கலங்கின. விழி முனைகளில் முத்துக் கோத்திருந்தது. உள்ளத்தின் படபடப்பும் உடலின் ஆற்றாமையும் இன்னமும் அப்படியேதான் இருந்தன. மேஜை மீது அவன் பார்வை ஊர்ந்தது, எழுதப்படிருந்த தாள்களின்