பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/54. கண்ணம்மாவின் எழில்

விக்கிமூலம் இலிருந்து

54. கண்ணம்மாவின் எழில்

ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ரூபகம்

பல்லவி

எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ;
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ;
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன்.

சரணங்கள்

எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;
திங்களை மடிய பாம்பினைப் போலே
செறிகுழல்,இவள் நாசி எட் பூ (எங்கள்)

மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதரு வாய் அமிர்தம்;இத ழமிர் தம்;
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய லரம்பை; சதுர் அயிராணி. (எங்கள்)

இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹர் சக்தி வாசம்;
வயி ராலிலை,இடை அமிர்த வீடு. (எங்கள்)

சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்;
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம் (எங்கள்)